லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது...
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில், சுமார் 65 லட்சம் லாரிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் லாரிகள் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய 5000 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ளது. மேலும், தினமும் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.