அரசுப்பள்ளியில் ஹிஜாப் குறித்து நிகழ்ந்த விவாதம்.. ஜமாத் தரப்பு கூறிய பரபரப்பு தகவல்

x

ராமநாதபுரம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, மேலாண்மை குழு சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.

ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஹிஜாப் அணிந்து வந்தது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரும், மாணவியின் தாயும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜமாத்தார்களுடன் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கூட்டி கருத்து கேட்கப்பட்டது. அதில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தான் பள்ளிக்கு வருவார்கள் என்றும், அதற்கு தடை தெரிவிக்க கூடாது என ஜமாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் கருத்துக்களை கேட்டறிந்த மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள், பிள்ளைகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரலாம் என்றும் அதற்கு யாரும் தடை விதிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். அதே சமயம், தலைமை ஆசிரியரிடம் பேசியதை தெரியாமல் வீடியோவாக எடுத்து அதனை வெளியிட்டது தவறு என மாணவியின் பெற்றோரிடமும், ஜமாத்தார்களிடமும் தெரிவித்தார். மேலும் இது குறித்து பேசிய, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரசுப்பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாம் அணியாமலும் வரலாம் எந்த தடையும் இல்லை என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்