வங்கிகளில் ரூ.8,045 கோடி கடன் மோசடி.. தனியார் நிறுவன குழும ஆடிட்டர் கைது
வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக, தங்கம் மற்றும் எஃகு இறக்குமதி செய்யும் சுரானா நிறுவனத்தின் மீது, கடந்த 2012ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் காரணமாக, அமலாக்கத்துறையினரும் வழக்குப்பதிவு செய்து, அந்த குழுமத்தின் இயக்குநர்களான தினேஷ் சந்த் சுரானா மற்றும் விஜய்ராஜ் சுரானா ஆகியோரை கைது செய்தனர். இதுதொர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், போலியான கிளை நிறுவனங்கள் பெயரில், பொதுத்துறை வங்கிகளில் 8 ஆயிரத்து 45 கோடி ரூபாய் கடன் பெற்று, அதனை திரும்ப செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி, சுரானா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், பாஜக மாநில நிர்வாகியுமான ராகுல் சுரானா கைது செய்யப்பட்டார். மேலும், வங்கி மோசடியில் தொடர்புடையதாகக் கூறி, அந்நிறுவனத்தின் ஆடிட்டர் தேவராஜனை கைது செய்து, தேசிய மோசடி தடுப்புப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.