நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய நான்கு தாலுகா மக்கள் சிகிச்சை பெற மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கே வருகின்றனர். இம்மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் மின்சார கேபிள் எரிந்து பழுதானதால், மதியம் 1 மணியிலிருந்து மின்தடை ஏற்பட்டது. பகலில் சமாளித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும், நோயாளிகளின் உறவினர்கள் மொபைல் போனில் காட்டும் வெளிச்சத்திலும் சிகிச்சை அளித்தனர். காயமடைந்து வருபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்யவே தடுமாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாதுறை அரசு மருத்துவமனையின் இந்த அவல நிலை மக்களை வேதனை அடைய செய்துள்ளது.