சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு - அரசுக்கு அறிவுறுத்தல்
தமிழகத்தில் உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.;
கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெயகணேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது, சட்டவிரோதமாக செங்கல் சூளைகள் செயல்படுவதாக கூறும் இடத்தை கனிமவளத்துறை கூடுதல் இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளதாகவும், அவரது அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அனுமதி இல்லாமல் செங்கல் சூளைகள் செயல்படுவதாக புகார்கள் அதிகரித்துள்ளதாகவும் , இதை மாநில
அரசு விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.உரிமம் பெற்ற செங்கல் சூளைகள் மட்டுமே செயல்படுகின்றன என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், செங்கல் சூளைகளுக்கு உரிமம் வழங்க வேண்டிய வழிமுறைகளை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் கனிமவள கூடுதல் இயக்குனர் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி
வைத்தனர்.