கோயில்களில் இ-சேவை கட்டணம் வசூலிக்கும் தனியார் இணையதளங்கள் மீது நடவடிக்கை - இந்து அறநிலையத்துறை உத்தரவு
கோயில்களில் பூஜை, பரிகாரம் செய்வதற்காக இ- சேவை கட்டணம் வசூலிக்கும் தனியார் இணையதளங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகங்களுக்கு இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 648 கோயில்கள் உள்ளன. அந்த கோயில்களில் அபிஷேகம், தங்கரதம், தங்கத்தொட்டில், உள்ளிட்டவைகளுக்காக இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் தனியார் இணையதளங்கள் மூலம் இ- சேவையில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில், சில தனியார் இணையதளங்கள் பக்தர்களை ஏமாற்றி வருவது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பூஜை உள்ளிட்ட இ- சேவைகள் அனைத்தும் அந்தந்த கோயில் இணையதளங்கள் மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
கோயில்களுக்கு தொடர்பு இல்லாத தனியார் நிறுவனங்கள், இ- சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் காவல்துறையில் புகார் அளித்து குற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கோயில் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.