ஆப்கானில் வாலிபால் வீராங்கனை கொலை - தலிபான்கள் வெறிச்செயல்
ஆப்கானிஸ்தானில் மகளிர் வாலிபால் வீராங்கனையை தலிபான்கள் தலையை துண்டித்து கொன்ற பயங்கரம் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் மகளிர் வாலிபால் வீராங்கனையை தலிபான்கள் தலையை துண்டித்து கொன்ற பயங்கரம் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான் படை காபூல் நகரை நோக்கி நகர்ந்த போது, நீதிபதியாக இருந்த பெண்கள், விளையாட்டு வீராங்கனைகள், பெண் கலைஞர்கள் மறுபுறம் நாட்டைவிட்டு வெளியேறினர்.
இவ்வாறு ஒரு சிலர் வெளியேறினாலும் போக்குவரத்து முடங்கியதால் பலரால் வெளியேற முடியவில்லை. தேசிய வாலிபால் அணியில் இடம்பெற்றிருந்த இரு வீராங்கனைகளால் மட்டுமே வெளியேற முடிந்ததாக தகவல் வெளியாகியது. அவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.
நீதிபதியாக இருந்த பெண்களையும், சர்வதேச விளையாட்டுகளில் பங்கு பெற்ற பெண் வீராங்கனைகளையும் தலிபான்கள் வீடு வீடாக தேடுவதாக தகவல் வெளியாகியது.
இதற்கிடையே விளையாட்டு வீராங்கனைகள் தங்களுடைய உபகரணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை அழித்துவிடுமாறு வெளிநாடுகளில் இருந்த பிற வீரர்களும், பயிற்சியாளர்களும் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் ஜூனியர் மகளிர் வாலிபால் அணிக்காக விளையாடிய வீராங்கனை மஹ்ஜபின் ஹகிமியை தலிபான்கள் தலை துண்டித்து கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை பெயர் கூற விரும்பாத ஆப்கானிஸ்தான் பெண்கள் அணியின் பயிற்சியாளர் பாரசீக ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார்.
மஹ்ஜபின் ஹகிமி கொல்லப்பட்டது வெளி உலகிற்கு தெரிவிக்க கூடாது என அவரது பெற்றோரை தலிபான்கள் மிரட்டியுள்ளனர் எனவும், ஆப்கானிஸ்தானில் இருக்கும் வீராங்கனைகள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அச்சத்தில் உறைந்துள்ளனர் எனவும் பயிற்சியாளர் கூறியிருக்கிறார்.
தலிபான்களால் கொல்லப்பட்ட வீராங்கனை ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையின மக்களான ஹசாரா இனத்தை சார்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story