பெய்ரூட்டை உலுக்கியுள்ள வன்முறை சம்பவம்: துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு

லெபனானன் தலைநகர் பெய்ரூட்டில் மிகவும் மோசமான வன்முறை சம்பவத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்... இச்சம்பவத்தின் பிண்ணனி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
பெய்ரூட்டை உலுக்கியுள்ள வன்முறை சம்பவம்: துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு
x
தற்போதைய வன்முறையின் வரலாறு குறித்து அறிய ஒரு வருடத்திற்கு முன்பு பயணிக்க வேண்டும்...கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, லெபனானையே உலுக்கிய பயங்கரமான வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்தது...

துறைமுகத்தின் சேமிப்புக்கிடங்கள் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரத்து 750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்ததில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்...

பெய்ரூட் நகரையே தரை மட்டமாக்கிய இவ்வெடி விபத்தால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்...

உலகையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பேசு பொருளானது...


நகரையே போர்க்களமாக மாற்றிய இந்த துறை முக குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையானது பெரும் பதற்ற சூழலை உருவாக்கியுள்ளது...

குண்டு வெடிப்பு தொடர்பான நீதிபதி விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதுதான் இந்த முறை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது...

இந்தத் தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்...மேலும் பலர் காயமடைந்துள்ளனர்...

இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் நீதிபதி  தாரெக் பிதார் குற்றவாளிகளுடன் கை கோர்த்துக் கொண்டு பாரபட்சத்துடன் விசாரணை நடத்துவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது...

இதனால் அவரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெரும் போராட்டத்தை ஹெஸ்புல்லா மற்றும் அமல் இயக்கத்தினர் கையிலெடுத்தனர்...

கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் வசிக்கக் கூடிய டெயோனே பகுதி வழியாக போராட்டக் காரர்கள் சென்ற போது, கட்டடங்களின் உச்சிகளில் ஏறி நின்ற மர்ம நபர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களின் தலையைக் குறி வைத்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்...

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த லெபனான் இராணுவத்தினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்...


பல மணி நேரமாக காதைப் பிளக்கும் துப்பாக்கிச் சூடு சப்தத்தால் அப்பகுதியினர் அச்சத்தில் உறைந்தனர்...

ஒன்றுமறியா பள்ளிக் குழந்தைகளும் நடப்பது என்னவென்றே தெரியாது துப்பாக்கிச் சூட்டை வேடிக்கப் பார்த்துள்ளன...பிஞ்சு மனதில் வன்முறையையும் பாதுகாப்பின்மையையும் விதைத்துள்ளது இச்சம்பவம்... 

வன்முறையின் போது எங்கிருந்து தாக்குதல் நடக்கிறது என்பது தெரியாமல் மக்கள் உயிரைக் காத்துக் கொள்ள அங்கும் இங்கும் ஓடினர்...நிகழ்விடத்தில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டன...


இது தொடர்பாக ஹெஸ்புல்லா மற்றும் அமல் இயக்கத்தினர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நாட்டை யுத்தத்தை நோக்கி நகர்த்த பயங்கரவாதக் கும்பல்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளன...

அரசியல் லாபத்தை நோக்கமாகக் கொண்டு, துறைமுக குண்டு வெடிப்பு வன்முறைக்கு பின்னால் இருக்கும் கும்பல், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்...

அந்நாட்டு அதிபர் நாஜிப் மிகாதி அமைதியை வலியுறுத்தியுள்ளார்...சாலைகள் முழுவதும் இராணுவத்தினர் இறக்கப்பட்டுள்ளனர்...ஆயுதமேந்தியவர்கள் யாரேனும் பொது இடங்களில் சுற்றித் திரிந்தால், கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...

உள் நாட்டுப் போரைப் போல பதட்டமான் சூழலிலேயே காலத்தைக் கடத்த வேண்டிய சூழலுக்கு பெய்ரூட் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்