(14/10/2021 ) விறு விறு செய்திகள்

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை - தந்தை மகன் இருவரும் கைது
(14/10/2021 ) விறு விறு செய்திகள்
x
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை  - தந்தை மகன் இருவரும் கைது
ஒசூர் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த தந்தை மகன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொத்தூர் கிராமத்தில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக அட்கோ காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில்  மேற்கொண்ட சோதனையில் பட்டாபிராமன் என்பவரும் அவரது மகன் வெங்கடேஷ் என்பவரும் தங்களது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களது வீட்டில் பதுக்கி வைத்திருத்த  2 கிலோ கஞ்சா போதைப்பொருட்களையும்  பறிமுதல் செய்தனர். 


கோயிலில் சடலமாக கிடந்த இளைஞர் - தலையில் பலமாக தாக்கி படுகொலை - சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை 

ஆரணியில் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். ஐஸ் வியாபாரியான முருகேசன், திருமலை சமுத்திரம் ஏரி கரையோரம் உள்ள கோயிலில் தலையில் பலமாக தாக்கப்பட்டு சடலமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றிய ஆரணி போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்த பேருந்து - பயணி ஒருவர் உயிரிழப்பு - 10 பேர் காயம்



உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் இருந்து பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் நிறுவன பேருந்து ஒன்று, காசியாபாத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த‌து. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

சீனாவைப் புரட்டிப்போட்ட "கொம்பாசு" புயல் - எல்லை மீறிய பாதிப்புகள் - திணறும் மக்கள்



சீனாவின் தெற்கு கடலோரப் பகுதிகள், புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்களைக் கடக்க முடியாமல் திணறி வருகின்றன. கியான்காய் நகரில் நேற்று கரையைக் கடந்த கொம்பாசு புயல், இந்த ஆண்டு சீனாவில் வீசிய மிகவும் கடுமையான புயலாகப் பார்க்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய அரசு முனைப்புடன் செயல்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இருப்பினும் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள முடியாமல் சீன மக்கள் திணறி வருகின்றனர்.

2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் - அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி


2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, கனடா மற்றும் மெக்சிகோவின் அமெரிக்க எல்லைகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தளர்த்த முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் முதல் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தொடர்ந்து தடை நீடிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சிறையில் இருந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் - கொரோனா தொற்றால் உயிரிழப்பு



சிறையில் இருந்த முன்னாள் வெனிசுலா நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். 1 தசாப்தமாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ரால் பாடுவேல் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டதாக, அவரது மகள்களில் ஒருவரான ஆன்ட்ரெய்னா தெரிவித்தார். கடந்த 2009ம் ஆண்டு ஊழல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட ரால் பாடுவேல், 2017ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். ஆனால் அதிபர் நிகோலஸ் மடுரோவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். பல்வேறு மனித உரிமைக்குழுக்களும் ரால் பாடுவேலின் இறப்புக்கு அரசைக் குற்றம் சுமத்தி வருகின்றன.

இயற்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் - பள்ளிக் குழந்தைகளுக்கு வலியுறுத்தல்



இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் ஆகியோர் லண்டனில் பள்ளிக் குழந்தைகளுக்கு இயற்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். பாதிக்கப்பட்ட பூமியை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை, தாவரவியல் பூங்காவான கியூ பூங்காவில், அரச தம்பதி குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டனர். அப்போது லண்டன் ஆளுநர் சாதிக் கானும் உடன் இருந்தார். 

மெக்சிகோவில் புலம்பெயர்ந்தோர் தஞ்சம்  - அரசின் உதவியை நாடும் அகதிகள்



மெக்சிகோவின் டபாச்சுலா பகுதியில் உள்ள விளையாட்டரங்கு ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு முகாம்களுக்காக அந்நாட்டு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நிற்பவர்களில் பெரும்பாலானோர் ஹைதி மக்கள். மேலும், குவாதமாலா, வெனிசுலா, ஹோன்டுரான் புலம்பெயர்ந்தோரும் இதில் அடக்கம். தங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தால் தான், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று ஹைதி அகதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பசி மற்றும் குளிர்கால பாதிப்புகள் - அவதியுறும் ஆப்கான் மக்கள்


பசி மற்றும் குளிர்கால பாதிப்புகளை எதிர்நோக்க உள்ள ஆப்கான் மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உணவு, போர்வை, பணம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.  ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்நாடு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. பசிக் கொடுமையால் மக்கள் அல்லலுற்று வருகின்றனர். பலர் காபூல் மாகாணங்களை விட்டு வெளியேறி கூடாரங்களிலும் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாக பல தொண்டு நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்