ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் - ஊஞ்சல் கட்டி ஆடும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவத்தினர் விட்டுச் சென்ற பழைய விமானங்கள் மற்றும் இதர ராணுவ தளவாடங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் - ஊஞ்சல் கட்டி ஆடும் தலிபான்கள்
x
ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவத்தினர் விட்டுச் சென்ற பழைய விமானங்கள் மற்றும் இதர ராணுவ தளவாடங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். சேதமடைந்து, கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு பழைய விமானத்தின் இறக்கை ஒன்றின் விளிம்பில் ஊஞ்சல் ஒன்றை கட்டி, தலிபான்கள் ஊஞ்சல் விளையாடும் காட்சிகளை லிஜன் ஸாவோ என்ற சீன அரசு அதிகாரி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். பல நூற்றாண்டுகளாக, மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் மற்றும் அவற்றின் ஆயுதங்களின் சுடுகாடாக ஆப்கானிஸ்தான் விளங்குவதாகவும், தலிபான்கள் அமெரிக்கர்களின் விமானங்களை விளையாட்டுப் பொருட்களாக மாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி நாடு என்று தலிபான்கள் சமீபத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இடைக்கால அரசு ஒன்றை தலிபான்கள் அமைத்த பின், ஆப்கானிஸ்தானிற்கு சீனா 3.1 கோடி டாலர்கள் நிதி உதவி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

சீனா : சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட யானைகள்

சீனாவில் கடந்த 17 மாதங்களாக பல நூறு கிலோ மீட்டர்கள் சுற்றித் திரிந்த 14 ஆசிய யானைகள், தங்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இறுதியாக தங்கள் பூர்வீக வாழ்விடத்தை வந்தடைந்தன. ஆசிய யானைகள் அழியும் ஆபத்தில் உள்ள விலங்குகளில் ஒன்றாக உள்ளன. சீனாவில் சுமார் 300 காட்டு யானைகளே உள்ளன. இந்த யானைகள் கூட்டம் இடபெயர்ந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்பட்டாத நிலையில், தற்போது அவை யுனான் மாகாணத்தின் ஷீசுவாங்பன்னா இயற்கை சரணாலயப் பகுதிக்கு வந்து சேர்ந்தன. யானைகளின் இடம்பெயர்வினால், மனித - விலங்கு மோதலைத் தடுக்க கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேரை அந்நாட்டு அரசு இடம்பெயரச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

உயிரியல் பூங்காவிற்கு புது வரவு - குழந்தையைப் போல் விளையாடிய பாண்டா

சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில், பாண்டா கரடி ஒன்று ஆண் குட்டியை ஈன்றது. ஆகஸ்ட் 14ம் தேதி பிறந்த இந்தக் குட்டிப் பாண்டாவின் பாலினத்தை அடையாளப்படுத்தும் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் குழந்தையைப் போல் துள்ளி விளையாடிய பாண்டாவின் சேட்டைகள் அனைவரையும் கவர்ந்தன. செயற்கைக் கருவூடல் முறையில் பாண்டா குட்டியை ஈன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெருவில் காட்டுத் தீ பரவல் தீவிரம் - 80 ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள் சேதம்

பெரு நாட்டில் காட்டுத் தீ பரவலின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கஸ்கோ நகரில் காடுகள் பற்றி எரியும் நிலையில், இராணுவத்தினர், காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், மற்றும் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உருபம்பா மலைத் தொடர்களில் பரவிய காட்டுத் தீயால் குறைந்தபட்சம் 80 ஹெக்டேர் பரப்பிலான நிலங்களாவது சேதமடைந்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், ஒரு வீடு எரிந்து சாம்பலான நிலையில், 15 ஆடுகள் மற்றும் 5 பசுக்கள் தீ விபத்தில் பலியாகியுள்ளன. 







Next Story

மேலும் செய்திகள்