கொரோனா வைரசின் தோற்றம் - 2ம் கட்ட ஆய்வு நடத்த முடிவு

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வானது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று சீன வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசின் தோற்றம் - 2ம் கட்ட ஆய்வு நடத்த முடிவு
x
கொரோனா வைரசின் தோற்றம் குறித்த முதற்கட்ட ஆய்வு சீனாவில் நடைபெற்றது.


சீனாவின் வூஹான் மாகாணத்திற்கு சென்ற உலக சுகாதார அமைப்பினர் அங்குள்ள ஆய்வகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் முழு சுதந்திரத்துடன் ஆய்வு மேற்கொண்டதாகக் கருத்து தெரிவித்தனர்.


சீன அதிகாரிகளும், மருத்துவர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.


வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் தோன்றியதாக கூறப்பட்ட கருத்தில் உண்மையில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

ஆனால், ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள், கொரோனா வைரசின் தோற்றம் குறித்த 2ஆம் கட்ட ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தின.


கொரோனா வைரசானது ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்கலாம் என்ற கருத்தையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உறுதியாகக் கூறினார்.


இந்நிலையில், சீன வல்லுனர்கள் இது குறித்து தெரிவிக்கையில், கொரோனா 2ஆம் கட்ட ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற முடிவில் அரசியல் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்க அரசு, கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வை அரசியலாக்கி படுத்தி பாழ் செய்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.


2ஆம் கட்ட ஆய்வு சீனாவில் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பு சீன அரசுடன் ஆலோசிக்கவில்லை என்றும், எந்த ஒரு இறையாண்மை மிக்க நாடும் இப்படிப்பட்ட சூழலை ஏற்றுக் கொள்ளாது என்றும் அவர்கள் புகார் கூறினர்.


சீனாவில் கண்டறியப்படுவதற்கு முன்னதாகவே, கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே ஐரோப்பாவில் கொரோனா தொற்று எப்படி கண்டறியப்பட்டது என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர். 

அத்துடன், ஏற்கனவே ஏராளமான வைரஸ்களின் தோற்றம் குறித்த ஆய்வே இன்னும் முடிவடையாத நிலையில், கொரோனா வைரசின் தோற்றத்தைக் கண்டறிவது மிகவும் சிக்கலான ஆய்வு என்பதால் கூடுதல் காலம் பிடிக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்