துனிசிய பிரதமரை நீக்கிய அதிபர் கைஸ் சயீத் - பிரதமர் ஆதரவாளர்கள் போராட்டம்
கொரோனா தடுப்பில் முறையாக செயல்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டிய நிலையில், துனிசிய பிரதமரை அந்நாட்டு அதிபர் பதவி நீக்கம் செய்துள்ளார்.
தவறான கருத்து மற்றும் கலவரம் மூலம் மக்களிடையே பிரச்சினைகளை தூண்டி, அதன் மூலம், நாடாளுமன்றத்தை பிரதமர் முடக்குவதாக அந்நாட்டின் அதிபர் கைஸ் சயீத் குற்றம் சாட்டினார். முன்னதாக, கொரோனா தடுப்பு உள்ளிட்ட செயல்களில் பிரதமர் சரியாக செயல்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதனிடையே, துனிசிய பிரதமரை, அதிபர் பதவி நீக்கம் செய்தார். நாடாளுமன்றத்துக்கு வந்த சபாநாயகரையும் ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.
இதற்கிடையே, பிரதமர் பதவி நீக்கத்தை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர். ராணுவ வீரர்கள், அவர்களை கலைத்தும், பாதுகாப்பளித்தும் வருகின்றனர். கன்னோச்சி பகுதியில் ராணுவத்தினருடன் மோதல் ஏற்பட்டு, கலவரம் வெடித்ததால், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி, மக்கள் கலைக்கப்பட்டனர்.
அதே நேரத்தில், பிரதமர் நீக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக, அந்நாட்டு அதிபர் கைஸ் சயீத், வீதியில் இறங்கி நடந்து சென்றார்.
Next Story

