24 வருடங்களுக்கு முன் காணாமல் போன மகன் - பாசக்கார தந்தையின் அசராத தேடல்

பாசக்கார தந்தை ஒருவர் 24 வருட தொடர் தேடலுக்குப் பிறகு காணாமல் போன மகனுடன் ஒன்று சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
24 வருடங்களுக்கு முன் காணாமல் போன மகன் - பாசக்கார தந்தையின் அசராத தேடல்
x
பாசக்கார தந்தை ஒருவர் 24 வருட தொடர் தேடலுக்குப் பிறகு காணாமல் போன மகனுடன் ஒன்று சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

தரணியையே விலையாய்க் கொடுத்தாலும் தந்தை அன்புக்கு ஈடாகாது என்பதற்கு மற்றுமொரு சான்றாக விளங்குகிறார் சீனாவைச் சேர்ந்த குவா கேங்டன்...

இவரது 24 வருடத் தேடல் பயணத்தைக் கேட்டால், பூமியும் கூட பொறுமை இழந்து விடும்...

லியோசெங் பகுதியில் 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டே வயதான குவா சின்சென் திடீரென காணாமல் போகிறார்...

அவரைக் கடத்திச் சென்ற இளம்பெண்ணும் அவரது காதலரும் சின்சென்னை ஹெனான் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு விற்றுள்ளனர்...

மகன் காணாமல் போனதால் பதறிப்போன சின்சென்னின் தந்தை குவா கேங்டன், கண்ணீர் மல்க காவல்துறையில் புகார் கொடுத்தார்...

விசாரணை தொடர்ந்தது...ஒரு மாதம்...2 மாதம்...ஒரு வருடம்...அவ்வளவுதான்...அப்பகுதி முழுமையும் சல்லடை போட்டுத் தேடியும் சின்சென் கிடைக்காததால் போலீசார் தேடுதல் பணியைக் கை விட்டனர்...

ஆனால் பெற்ற மனம் பிள்ளையை மறக்குமா...கண்ணில் நீரோடும் மனதில் உறுதியோடும்...காணாமல் போன தனது மகன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டு பிடிப்பேன் என்று தீர்க்கமாக முடிவெடுத்தார் குவா கேங்க்டன்...

துணையாக ஒரு இருசக்கர வாகனம்...அதில் தனது மகனின் புகைப்படம் மற்றும் குறிப்புகள்... அவ்வளவுதான்... தனது நெடு வருடப் பயணத்தை சற்றும் தாமதிக்காமல் துவங்கினார் கேங்டன்...

வருடங்கள் உருண்டோடின...ஏகப்பட்ட கடன்...இடையில் பல விபத்துகள் நிகழ்ந்தன...10 இரு சக்கர வாகனங்கள் மாறின...கொஞ்ச நஞ்சமல்ல...5 லட்சம் கிலோ மீட்டர் பயணத்திற்குப் பிறகு, டி,என்.ஏ சோதனை மூலம், தனது நீர்த்துப் போகாத நம்பிக்கையால் 24 வருடங்களுக்குப் பிறகு இறுதியாக சின்சென்னைக் கண்டறிந்தார் கேங்டன்...

இந்த கணத்திற்காக எத்தனை வருடங்கள் தவமிருந்தார்...இதோ அந்த உணர்வுப்பூர்வமான நொடிகள்... தன் கைகளில் தவழ்ந்த ஆசை மகன் கண் காணா தூரத்தில், அப்பாவின் வாசமின்றி...தோளுக்கு மேல் வளர்ந்து நிற்க...கண்ணீர் வழிய கட்டித் தழுவிக் கொள்கிறார் கேங்டன்...

தளராத நம்பிக்கையோடு போராடிய இந்தத் தந்தையின் பாசம் உலகத்தினர் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.;..


Next Story

மேலும் செய்திகள்