இலங்கையில் சரக்கு கப்பல் விபத்து - மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிப்பு
இலங்கையில் தீக்கிரையாகி கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து வெளியேறிய பிளாஸ்டிக் மூலப் பொருட்கள், இந்தியாவை அடையலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் தீக்கிரையாகி கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து வெளியேறிய பிளாஸ்டிக் மூலப் பொருட்கள், இந்தியாவை அடையலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பனிக்கட்டி மழை பெய்தது போன்று காட்சியளிக்கிறது இலங்கையின் கடற்கரை...
ஆனால், வெண்நிற முத்துக்களாக காட்சியளிக்கும் அவை உண்மையில் பனிக்கட்டிகளா...? என்றால் இல்லை...
ஆம், அவையனைத்தும் பிளாஸ்டிக் பேக்குகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான பிளாஸ்டிக் பலெட்கள் ஆகும்...
இவை, அண்மையில் சமீபத்தில் கொழும்பு துறைமுகத்தில் இருந்து 9.5 நாட்டிக்கல் மையில் தொலைவில் தீ விபத்துக்குள்ளாகி மூழ்கிய எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் சரக்கு கப்பலில் இருந்து வெளியேறியவை...
குஜராத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற அந்த சரக்கு கப்பலில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து இந்திய கடலோர காவல்படை மற்றும் இலங்கை கடற்படையின் 13 நாள் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. ஆனால், தீயினால் உருகுலைந்த கப்பல் கடலில் மூழ்கியது.
கப்பலில் மொத்தம் ஆயிரத்து 500 கண்டெய்னர்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும், அதில் 81 கண்டெய்னர்களில் ஆபத்தான பொருட்கள் இருப்பதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
கப்பலில் 300 டன் எண்ணெய், 25 டன் நைட்ரிக் அமிலம், அழகு சாதன மூலப் பொருட்கள் மற்றும்
400 கண்டெய்னர்களில் பிளாஸ்டிக் பலெட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
கப்பலில் மளமளவென தீ எரிந்த போது கடலிலும் அலைகள் சீற்றமாகவும், காற்று வேகமாகவும் இருந்தது. இதனால் உருண்ட கண்டெய்னர்கள் அலையால் கரைப்பகுதிக்கு இழுத்து வரப்பட்டுள்ளது.
நைட்ரிக் அமிலம் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. மூழ்கிய கப்பலில் இருக்கும் ரசாயனப் பொருட்கள், எண்ணெய் கடலில் கசிந்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதற்கிடையே, அப்பகுதியில் இதுபோன்ற கசிவு எதுவும் தென்படவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்து உள்ளது.
தீ விபத்தில் அவை எரிந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.ஆனால் கப்பலில் இருந்த பிளாஸ்டிக் பலெட்கள் கடலில் கலந்துவிட்டன.
ஆர்ப்பரிக்கும் கடல் அலையில் மிதந்து வரும் அவை, கொழும்பு கடற்கரை பகுதிகளில் குவிகிறது. அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அவைற்றை அகற்றி வருகிறார்கள். ஆனால் அள்ள அள்ள குறையாது பிளாஸ்டிக் பலெட்கள் கரையில் பரவி வருகிறது.
அப்பகுதியில் 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இதனை பார்க்கும் மீனவர்கள், தங்களுடைய வாழ்வாதாரம் பாழாகி வருவதாக வேதனை தெரிவிக்கிறார்கள்...
அரிசி போல் காட்சியளிக்கும் பிளாஸ்டிக் பலெட்களை மீன்கள் தவறுதலாக உணவாக எடுத்துக் கொண்டால் விளைவுகள் கடினமானதாக இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
அவைகளை சாப்பிடும் மீன்கள் இறக்கவில்லை என்றாலும், உணவு சங்கிலி மூலம் மனிதர்களையும் அடைய வாய்ப்பு இருக்கிறது என்கிறார் நெதலார்ந்து நாட்டு ஆய்வாளர் டெல்பின் லோபெல்லி.
இதற்கிடையே அங்கு மீன்கள், ஆமைகள் செத்து கரையொதுங்கும் புகைப்படங்களும் வெளியாகியிருப்பது அச்சத்தை அதிகரித்து உள்ளது.
Next Story