(27/04/2021) விறு விறு செய்திகள் | ஸ்பெயின் அமைச்சருக்கு கொலை மிரட்டல் - ரத்தக் கறையுடன் அனுப்பப்பட்ட கத்தி

(27/04/2021) விறு விறு செய்திகள் | ஸ்பெயின் அமைச்சருக்கு கொலை மிரட்டல் - ரத்தக் கறையுடன் அனுப்பப்பட்ட கத்தி
(27/04/2021) விறு விறு செய்திகள் | ஸ்பெயின் அமைச்சருக்கு கொலை மிரட்டல் - ரத்தக் கறையுடன் அனுப்பப்பட்ட கத்தி
x
செர்னோபில் அணு உலை விபத்து - 35-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

உக்ரைன் நாட்டில் செர்னோபில் அணு உலை விபத்தின் 35-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்த 1986-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் உக்ரைன் இருந்தபோது, செர்னோபில் அணு உலை வெடித்து சிதறியது. 20-ஆம் நூற்றாண்டின் பயங்கரமான விபத்தாக இந்த சம்பவம் பார்க்கப்படும் நிலையில், செர்னோபில் நினைவிடத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மரியாதை செலுத்தினார். 

தேவாலயத்தில் யோகா வகுப்பு - மாதம் இருமுறை இணையத்தில் வகுப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உள்ள புனித ஜான் தேவாலயத்தில், இணையம் வாயிலாக யோகா வகுப்பு நடத்தப்படுகிறது.  இது குறித்து யோகா ஆசிரியரான மியா மிச்செல்சன் பார்ட்லெட் தெரிவிக்கையில், கடந்த வருட ஈஸ்டர் சமயத்தின் போதே இந்த நிகழ்வைத் தொடங்கத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அந்தத் திட்டம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பிறகு இந்தத் தேவாலயமானது தற்காலிக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட நிலையில், தளர்வுகளுக்குப் பிறகு மியா மிச்செல்சன் யோகா வகுப்புகள் எடுத்து வருகிறார்.

அர்மேனிய மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் - இனப்படுகொலை என அறிவித்த ஜோ பைடன்

துருக்கி தலைநகர் அங்காராவில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். முதல் உலகப் போரின்போது ஒட்டமானிய பேரரசால், அர்மேனிய மக்கள் கொல்லப்பட்டதை, இனப்படுகொலை என ஜோ பைடன் அறிவித்து உள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள துருக்கி மக்கள், ஒட்டமானிய பேரரசு காலத்தின் உடையணிந்து, அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜூலையில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம் - ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், அங்கு ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நடந்து வருகிறது. மியாஷகி நகரில் நடந்த தொடர் ஓட்டத்தில், வீரர்களும் பிரபலங்களும் ஒலிம்பிக் ஜோதியை சுமந்து கொண்டு உற்சாகமாக ஓடினர். அவர்களை பார்வையாளர்கள் வழிநெடுகிலும் வரவேற்றனர். 

ஸ்பெயின் அமைச்சருக்கு கொலை மிரட்டல் - ரத்தக் கறையுடன் அனுப்பப்பட்ட கத்தி

ஸ்பெயின் நாட்டு சுற்றுலா அமைச்சருக்கு, ரத்தக் கறையுடன் கத்தி அனுப்பப்பட்டு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரீயஸ் மரோட்டோ என்ற பெண் ஸ்பெயின் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார். அவருக்கு வந்த பார்சலில், ரத்தக்கறையுடன் கத்தி அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், அந்நாட்டு இடதுசாரி தலைவர்கள் சிலருக்கும் கொலை மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் திறக்கப்பட்ட கொலோசியம் - உள்நாட்டு மக்களுக்கு மட்டும் அனுமதி

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கொலோசியம் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கொலோசியம் நீண்ட நாட்களாக மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால், கொலோசியம் திறக்கப்பட்டது. உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னர் உள்நாட்டு மக்கள் அனுமதிக்கப்படும் நிலையில், கொலோசியத்தைப் பார்வையிட வெளிநாட்டவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. 

பிரமாண்டமாக காட்சியளித்த "சூப்பர்மூன்" - வானியலின் அழகிய காட்சி

டெல்லியில் நேற்றிரவு, நிலவு சற்று பிரமாண்டமாக காட்சியளித்தது. பூமிக்கு மிக அருகில் நிலவு வந்ததால், வழக்கத்தை விட பெரிதாக நிலவு இருந்தது. சூப்பர்மூன் என இந்த நிகழ்வு அழைக்கப்படும் நிலையில், இந்தியா கேட் பகுதியில், காண்போரைக் கவரும் வகையில் நிலவு இருந்தது. அடுத்த மாதம் 26-ஆம் தேதியும் சூப்பர்மூன் நிகழ்வு ஏற்படும் என்று வானியல் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.  

பிரமாண்டமாக தோன்றிய "சூப்பர் மூன்" - லத்தீன் அமெரிக்க நாடுகளில் கண்கவர் காட்சி

சூப்பர்மூன் எனப்படும் பெருநிலவு, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரமாண்டமாக காட்சி அளித்தது. பூமிக்கு மிக அருகில் நிலவு வருவது சூப்பர்மூன் என கூறப்படும் நிலையில், அர்ஜென்டினா, சிலி, வெனிசுலா உள்ளிட்ட பல லத்தீன் அமெரிக்க நாடுகளில், காண்போரைக் கவரும் வகையில் சூப்பர் மூன் தோன்றியது.

இஸ்தான்புல்லில் "பெருநிலவு" - கண்களை மயக்கும் காட்சி

இஸ்தான்புல்லின் போஸ்போரஸ்-ல் சூப்பர்மூன் எனப்படும் பெரு நிலவானது அப்பகுதியில் உள்ள கெம்லிகா மசூதி மற்றும் கலாடா டவருக்கு மேலெழும்பிய காட்சி காண்போரை மயக்கும் வகையில் இருந்தது. பெரு நிலவு நாளின் போது, நிலவு தன்னுடைய சுற்றுப்பாதையில், முன்னெப்போதையும் விட பூமிக்கு நெருக்கமாக வரும். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான சூப்பர்மூன் "பிங்க் மூன்" என்றழைக்கப்படும் என நாசா அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்த பெருநிலவு தோன்றுவதால், வசந்த காலத்தில் அமெரிக்காவில் பூக்கும் பிங்க் ஃப்ளாக்ஸ் என்ற தாவரத்தின் பெயர் கொண்டு அழைக்கப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.

போண்டி கடற்கரையில் "பெரு நிலவு" - பிரமாண்டமாய் தெரிந்த "பிங்க் சூப்பர்மூன்"

ஆஸ்திரேலியாவில் உள்ள போண்டி கடற்கரையில், சூப்பர்மூன் எனப்படும் பெரு நிலவானது மிகப்பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது. பெரு நிலவு நாளின் போது, நிலவு தன்னுடைய சுற்றுப்பாதையில், முன்னெப்போதையும் விட பூமிக்கு நெருக்கமாக வரும். இந்நிலையில், போண்டி கடற்கரையின் மேலே பெரு நிலவு எழும்பிய காட்சி பார்ப்போரைக் கவரும் வகையில் அமைந்தது.  

முக கவசம் அணியாத தாய்லாந்து பிரதமர் - முக கவசம் அணியாததால் அபராதம்

முக கவசம் அணியாததால் தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஒச்சாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பாங்காக் ஆளுநர் அஷ்வின் வான்முயாங் தனது முகநூல் பக்கத்தில், முக கவசம் அணியாமல் விதிமீறலில் ஈடுபட்டது பற்றி தாய்லாந்து பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறி உள்ளார். இந்திய மதிப்பில் அவருக்கு சுமார் 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.   
முன்னதாக தாய்லாந்து பிரதமர் முக கவசம் இல்லாமல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.





Next Story

மேலும் செய்திகள்