(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்

(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்
(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்
x
(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள் 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் நடைபெற்ற என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்ற ஹர்திபோரா பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.  புதிதாக பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த இளைஞரிடம் பெற்றோர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சரணடையை முயற்சித்தோம், ஆனால் மற்ற பயங்கரவாதிகள் இளைஞரை சரணடைய அனுமதிக்கவில்லை என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் தெக்ரி கர்வால் மாவட்டம் புதோகி பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில்  கொளுந்துவிட்டு எரியும் தீ பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. அங்கு தீயை அணைக்க வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் போராடி வருகிறார்கள். இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரி கோகோ ரோஸ், ஒரு ஹெக்டேர் பரப்பளவில் தீ பரவியுள்ளது என்றும் தீ விபத்து நேரிட காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மகாராஷ்டிராவில் அதிதீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்று ஊரடங்கு தொடரும் நிலையில் பெரும்பாலான சாலைகளில் வாகன போக்குவரத்து காணப்படவில்லை. மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலைய கட்டிட முன்புற சாலை வெறிச்சோடியது.

குஜராத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். இதனால் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அவர்கள் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள். கடந்த முறை ஊரடங்கு போடப்பட்ட போது மிகவும் மோசமான சூழலை எதிர்க்கொண்டோம் எனக் கூறும் அவர்கள், முன்னதாகவே சொந்த ஊர் செல்கிறோம் எனக் குறிப்பிடுகின்றனர்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். 

கொலம்பியாவின் தலைநகர் பகோடாவில், கொரோனா பரவல் காரணமாக 3 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் மூன்றாவது அலை தாக்கத் துவங்கியுள்ள நிலையில், தொற்றுப்பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் 70 சதவீதம் நிரம்பி விட்டதாலும், புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பகோடாவின் மேயர் க்ளாடியா லோபஸ் தெரிவித்தார். 

கோனி தீவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவானது கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நியூயார்க் மேயர் பில் டே பிளாசியோ பொழுதுபோக்குப் பூங்காவைத் திறந்து வைத்தார். கொரோனா விதிகளைப் பின்பற்றி இப்பூங்கா திறக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விழாவிற்கு அப்பகுதி சுகாதாரப்பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு பொழுது போக்குப் பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

கரிப்பியன் தீவு செயின் வின்சென்ட் பகுதியில் உள்ள "லா சுஃப்ரியெர்" எரிமலை வெடிக்கத் துவங்கியுள்ள நிலையில், அப்பகுதிக்கு அருகில் வசிப்பவர்களின் நிலை மிகவும் கடினமாக இருக்கும் என பேரிடர் மீட்புக்குழுவின கருத்து தெரிவித்தனர். விண்ணை முட்டும் புகை மற்றும் சாம்பலைக் கக்கும் இந்த எரிமலையினால் சாலைகள், வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் சாம்பல் துகள்கள் நிரம்பி படர்ந்துள்ளன. இந்நிலையில், அப்பகுதி இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் நீண்ட நாட்கள் பிடிக்கும் என மீட்புக்குழுவினர் கருத்து தெரிவித்தனர். அத்துடன் எரிமலை இருக்கும் பகுதிக்கு அருகில் வசிப்பவர்களை மிக விரைவாக மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 



 

Next Story

மேலும் செய்திகள்