அமெரிக்காவை பதம் பார்க்கும் பனிப்புயல் - போக்குவரத்து துண்டிப்பு, விமானங்கள் ரத்து

கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது
அமெரிக்காவை பதம் பார்க்கும் பனிப்புயல் - போக்குவரத்து துண்டிப்பு, விமானங்கள் ரத்து
x
கொரோனா அச்சுறுத்தலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அமெரிக்காவுக்கான அடுத்த அச்சுறுத்தலாக வந்து சேர்ந்துள்ளது பனிப்புயல்...

கடந்த இரு நாட்களாக அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களை மிரட்டி வருகிறது பனிப்புயல்... கனெக்டிகட், டெலவர், மய்ன், மேரிலேண்ட், நியூ ஜெர்சி, நியூயார்க் என்று ஏகப்பட்ட மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. 

குறைந்த காற்றழுத்தப்பகுதியில், ஈரக்காற்றின் அளவு அதிகரிக்கும் வேளையில், பனிப்பொழிவும் அதிகரிக்கும். அந்த சமயத்தில், காற்றின் வேகம் அதிகரித்தால் பனிப்பொழிவு, பனிப்புயலாக மாறும்.அமெரிக்காவில் ஆண்டுதோறும், பனிப்புயல் வீசுவது, வாடிக்கையான நிகழ்வுதான் என்றாலும், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு அங்கு பனிப் புயலின் தாக்கம் பன்மடங்காகி உள்ளது.

தொடர்ந்து வீசி வரும் பனிப்புயலால், பெரும்பாலான அமெரிக்க மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். சாலைகள் எங்கும் பனி படர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நேர்ந்து உள்ளன. இதேபோல், மின் இணைப்புகளும், எரிவாயு குழாய்களும், சேதம் அடைந்து உள்ளன.

அமெரிக்காவின் இதயமாக கருதப்படும் நியூயார்க் நகரம் பனிப்புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டு அவசர நிலை அமலுக்கு வந்துள்ளது. சுமார் மூன்றரை அடி  உயரத்திற்கு சாலைகளில் கொட்டிக் கிடக்கிறது பனி. இதனால், பல நகரங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விர்ஜீனியா, நியூயார்க் மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தவித்து வருகின்றனர்.

பனிப்புயலால் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சாலையில் கொட்டிக் கிடக்கும் பனியை அகற்றும் பணிகள், அங்கு மும்முரமாக நடந்து வருகின்றன.
இதனிடையே, சில பகுதிகளில் ஆடல், பாடல் விளையாட்டுகளுடன் பனிப்புயலை வழக்கம்போல் வரவேற்கத் தொடங்கிவிட்டனர் அமெரிக்கர்கள்...


Next Story

மேலும் செய்திகள்