அமேசான் உரிமையாளர் போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் - விசாரணை நடத்த ஐ.நா. வலியுறுத்தல்
ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
அமேசான் நிறுவனரும் வாஷிங்டன் போஸ்ட் உரிமையாளருமான ஜெஃப் பெசோஸ் போன் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக சவூதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. செய்தியாளர் கசோகியை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக அவர் மீது எழுந்த சர்ச்சை அடங்கும் முன்பு அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. ஜெஃப் பெசோசுக்கு, வீடியோ மூலம் வைரசை அனுப்பி, அவரது போனில் இருந்த தகவல்களை திருடியதாக ஐ.நா. சிறப்பு செய்தியாளர்கள் ஆக்னஸ் கலமராடு மற்றும் டேவிட் கேயி ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர். இணையதள தாக்குதலுக்கும், முகமது பின் சல்மானுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் தொடர்புடைய சர்வதேச நிறுவனங்கள், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என சவூதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது. உண்மை மக்களுக்கு தெரியவர விரிவான விசாரணைக்கு உத்தரவிடவும் சவூதி அரேபியா வலியுறுத்தி உள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக எப்.பி.ஐ. விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story