அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த தம்பி - சிகிச்சை பலனின்றி அண்ணன் பலி
ஆரணி அருகே சொத்து தகராறில் அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விளைசித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளை. இவர் குடும்பத்தின் பூர்வீக சொத்தான வீட்டை, தனது மகன்களான ரமேஷ், புருஷோத்தமன், ராஜசேகர் ஆகியோருக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதில் அண்ணன் புருஷோத்தமனுக்கு சொத்து பங்கு தொகையாக 7 லட்சம் ரூபாய், தம்பி ராஜசேகர் கொடுக்க வேண்டும் என்று பேசி முடிவெடுக்கப்பட்டது. முதல் தவணையான ஒரு லட்சம் ரூபாயை அளித்த ராஜசேகர், மீதத்தொகையை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இந்நிலையில், வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த புருஷோத்தமன் மீது பெட்ரோல் ஊற்றி ராஜசேகர் பற்ற வைத்துள்ளார். தீப்பிடித்து அலறியபடி ஓடிய புருஷோத்தமன், முதல் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் உயிரிழந்தார். ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தம்பி ராஜசேகரை கைது செய்து போளூர் சிறையில் அடைத்தனர்.
Next Story