குடிபோதைக்கு அடிமையான கணவனால் விரக்தி - தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி
அளவு கடந்த மதுப்பழக்கம் இரண்டு உயிர்களை காவு வாங்கியிருக்கிறது... இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. 30 வயதான இவர், டிப்பர் லாரி வைத்துள்ளதோடு ஓட்டுநராகவும் இருந்து வந்தார். இவர் அரியாம்பாளையத்தை சேர்ந்த பிரியா என்ற பெண்ணை கடந்த 15 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்.
கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட கார்த்தி, அடிக்கடி நண்பர்களோடு சேர்ந்து மது அருந்துவதும் கிரிக்கெட் விளையாடுவதுமாக இருந்துள்ளார். கார்த்திக்கின் அளவு கடந்த மதுப்பழக்கம் காரணமாக அவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற கார்த்தி இரவு முழுவதும் வீடு திரும்பாமல் அடுத்த நாள் போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதை பார்த்த பிரியா கணவரிடம் கேள்வி கேட்கவே, இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அப்போது தகாத வார்த்தைகளால் கார்த்தி பேசியதால் விரக்தியடைந்த பிரியா, தன் வீட்டில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். போதை தெளிந்து எழுந்த கார்த்தி, தன் மனைவியின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் பயந்து போன அவர், மதுபாட்டிலை உடைத்து தன் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். ஆனாலும் உடனடியாக இறந்து விட வேண்டும் என நினைத்த அவர், ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவன், மனைவி என 2 பேரின் சடலங்களை கைப்பற்றிய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். அதீத குடிப்பழக்கம் பல கனவுகளோடு வாழ்க்கையை துவங்க இருந்த 2 பேரின் உயிரை காவு வாங்கியிருக்கிறது...
Next Story