துப்பாக்கி முனையில் அரங்கேறிய கொள்ளை - ஒரு கொள்ளையன் என்கவுன்ட்டர்; இரண்டு கொள்ளையர்கள் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பெண்ணிடம் செயின் பறித்த துப்பாக்கி கொள்ளையர்களில் ஒருவரை என்கவுன்ட்டர் செய்த போலீசார், 2 பேரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பெண்ணிடம் செயின் பறித்த துப்பாக்கி கொள்ளையர்களில் ஒருவரை என்கவுன்ட்டர் செய்த போலீசார், 2 பேரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பென்னலூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடியில் ஹவுஸ் கீப்பிங் பணி செய்து வருகிறார். நேற்று காலை இந்திராணி வழக்கம்போல் பணிக்கு செல்லும்போது, பின்னால் வந்த இரண்டு வடமாநில இளைஞர்கள் இந்திராணி கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் நகையை பறித்து சென்றுள்ளனர்.
அப்போது, இந்திராணி கூச்சலிடவே அங்கிருந்த பொதுமக்கள் கொள்ளையர்களை விரட்டி சென்றுள்ளனர். அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில், இரண்டு இளைஞர்களும் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளனர். இதனால் உறைந்து போன மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி மற்றும் டிஐஜி சத்திய பிரியா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ட்ரோன்கள் உதவியுடன், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், கொள்ளையர்கள் விட்டுச்சென்ற துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரவு முழுவதும் தேடுதல் பணி நடைபெற்றது.
இதனிடையே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் கடந்த 4ஆம் தேதி ஒரகடத்தில் நடந்த டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். துளசிதாஸ் கொலைசெய்யப்பட்ட போது மற்றொரு ஊழியர் ராமு பலத்த காயமடைந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய மார்பில் இருந்த துப்பாக்கி குண்டுகளை அகற்றினர்.
இதனால் ஒரகடம் கொலையில் தொடர்புடையவர்கள் தான், இந்த கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டவர்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story