மூன்றரை வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை - 11 மற்றும் 13 வயது சிறுவர்கள் கைது

சிவகாசியில் மூன்றரை வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவத்தில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி கவி அரசி. இவர் தனியார் மருத்துவமனையில் கேண்டீன் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 

இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் பிரியதர்ஷனுக்கு வயது 10. இரண்டாவது மகன் தீனதயாளனுக்கு மூன்றரை வயது. பார்த்திபனின் பக்கத்து வீட்டில் செல்வம் மற்றும் ரவி என 2 பேர் குடும்பமாக வசிக்கின்றனர். இவர்களுக்கும் பிள்ளைகள் உள்ள நிலையில் சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடுவது வழக்கம். 

அப்படி விளையாடும் போது சிறுவர்கள் கூச்சல் சத்தம் கேட்டு தீனதயாளனின் பாட்டி சிறுவர்களை திட்டி உள்ளார். இதனை சிறுவர்கள் செல்வம் மற்றும் ரவியின் பிள்ளைகள் தங்கள் வீட்டில் போய் சொல்லவே, சிறிய பிரச்சினை பெரியவர்கள் பிரச்சினையாக மாறியது. 

இதனால் இரு தரப்பிலும் பாட்டிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கெல்லாம் காரணமாக இருந்த தீனதயாளனின் பாட்டியை பழிவாங்க 11 மற்றும் 13 வயதான சிறுவர்கள் திட்டம் தீட்டினர். 

இதற்காக சம்பவத்தன்று சிறுவன் தீனதயாளனை அழைத்துக் கொண்டு சென்ற அவர்கள், ஊருக்கு வெளியே இருந்த கிணற்றில் தள்ளிவிட்டு வந்துள்ளனர். அதிக ஆழம் கொண்ட அந்த கிணற்றில் படிக்கட்டுகளே இல்லை. எந்த வகையிலும் தப்பிக்க முடியாத படி உயிர்ப்பலி வாங்கும் கிணறு அது. 

அந்த கிணற்றில் மூன்றரை வயது சிறுவனை தள்ளிவிட்டு எதுவுமே நடக்காதது போல சிறுவர்கள் 2 பேரும் தங்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். மகனை காணாமல் தவித்துப் போன பெற்றோர் அங்கும் இங்கும் தேடி அலைந்தனர். அப்போது அந்த வழியாக இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது சம்பந்தப்பட்ட சிறுவர்கள் 2 பேர் சிறுவனை அழைத்துச் செல்வது தெரியவந்தது. 

உடனடியாக அவர்களை பிடித்து விசாரித்த போது, தீனதயாளனின் பாட்டியை பழிவாங்கும் நோக்கில் அவரின் பேரனை கொன்றது தெரியவந்தது. சிறுவன் சத்தம் கேட்டு விடக் கூடாது என ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஆழமான கிணற்றில் தள்ளிவிட்டு வந்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சிறுவனின் சடலம் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பாக திரண்ட உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுவது பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது... 

இந்த சம்பவம் விஸ்வநத்தம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சிறுவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்... 


Next Story

மேலும் செய்திகள்