தாத்தா, பாட்டியை எரித்துக் கொன்ற பேரன் - சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன?

சேலம் அருகே தாத்தா, பாட்டியை 16 வயதான பேரன் கொடூரமாக எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இத்தனை கொடூர மனநிலைக்கு சிறுவனை செல்ல வைத்தது எது? இப்போது பார்க்கலாம்....
x
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கொத்தாம்பாடி பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா. 70 வயதான இவர், தன் மனைவி காசியம்மாளுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்கள். முதல் மகன் தேசிங்கு ராஜா. இவர் திமுகவில் உள்ளார். கடந்த முறை கொத்தாம்பாடி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். 2வது மகன் மணி, மூன்றாவது மகன் குமார். பிள்ளைகளுக்கு திருமணமான நிலையில் காட்டுராஜாவும், அவரது மனைவியும் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இதனிடையே அதிகாலை இவர்களின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பல மணி நேரமாக போராடியும் உள்ளே இருப்பவர்களை காப்பாற்ற முடியவில்லை. காரணம் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இருந்த போதிலும் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் வீடு முற்றிலும் எரிந்து தரைமட்டமானது. உள்ளே சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் தீயில் கருகிய நிலையில் கிடந்தனர்.

காட்டுராஜா சடலமாக மீட்கப்படவே, மருத்துவமனை செல்லும் வ​ழியில் காசியம்மாள் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் காட்டுராஜாவின் 3வது மகனான குமாரின் 16 வயது மகன் சிக்கினார். அவரை பிடித்து விசாரித்த போது தான் நடந்தது விபத்து அல்ல. கொடூரமான கொலை என தெரியவந்தது. தாத்தா, பாட்டி மட்டுமின்றி தன் பெரியப்பாவையும் கொல்ல அந்த சிறுவன் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. சிறுவனின் பெரியப்பா, தேசிங்குராஜா ஊராட்சி மன்ற தலைவராக இருந்ததால் ஊரில் செல்வாக்கான நபராக உள்ளார். அத்துடன் வசதியிலும் அவர் உயர்ந்திருக்கிறார். அவ்வப்போது தாத்தா, பாட்டியும் மூத்த மகன் தேசிங்கை பாராட்டி பேசுவது குமாரின் மகனான சிறுவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் தான் தன் பெரியப்பாவை கொல்ல திட்டமிட்டுள்ளார் அந்த சிறுவன். தன் பெரியப்பாவை வரவழைக்க அவர் திட்டமிட்ட போது தான் தன் தாத்தா, பாட்டியை கொல்லும் திட்டமானது தோன்றியிருக்கிறது. சம்பவத்தன்று அதிகாலை பெட்ரோல் கேனுடன் வந்த அந்த சிறுவன், தாத்தா, பாட்டியின் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு கூரையின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். எப்படியும் தகவலறிந்து பெரியப்பா வருவார்.. அப்போது அவரை தீர்த்துக் கட்டலாம் என நினைத்து அரிவாளுடன் காத்திருந்த போது போலீசாரிடம் வசமாக சிக்கினார். நடந்ததை எல்லாம் அந்த சிறுவன் போலீசில் வாக்குமூலமாக அளித்த போது போலீசாரே அதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுவனை கைது செய்ததோடு, உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதியவர்கள் தங்கள் பேரனால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்களை மீளா அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது...

தந்தி டிவி செய்திகளுக்காக ஆத்தூரில் இருந்து செய்தியாளர் சங்கர்...

Next Story

மேலும் செய்திகள்