வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகள் - கோயில்களில் வைக்க அனுமதி அளிப்பு
வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை கோயில்களில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு, ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக சமய விழாக்கள், மத ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை கோயில்களில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொறுப்பு அலுவலர் ஒருவரை நியமித்து, கோயில்களில் விநாயகர் சிலைகளை சேகரிக்க வேண்டும் எனவும், எந்த புகாரும் ஏற்படாதவாறு கோயில் வளாகத்தில் விநாயகர் சிலைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மண்டல இணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் ஆகியோர் தங்கள் சரகத்தில் நியமிக்கப்பட்ட பொறுப்பு அலுவலர் மற்றும் விநாயகர் சிலை சேகரிப்பு ஏற்பாடுக்கான விவரங்களை அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சேகரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நீர் நிலைகளில் கரைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story