நடுத்தெருவில் மயங்கி விழுந்த சிறுவன்: பெற்றோரால் பரிதவிக்கும் 13 வயது சிறுவன்
நாகர்கோவில் அருகே பெற்றோர் கைவிட்டதால் 13 வயது சிறுவன் மருத்துவமனையில் பரிதவித்து காத்திருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர்கள் சாகுல் ஹமீது, பாத்திமா தம்பதிக்கு 13 வயது மகன் உள்ளான். இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சாகுல் ஹமீது இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வட்டக்கரை பகுதியில் வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், பாத்திமா தனது மகனை அழைத்துச்சென்று, கணவர் சாகுல் ஹமீது வீட்டில் விட்டு விட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சாகுல் ஹமீது வெளியூர் சென்ற நிலையில், சிறுவனை வீட்டிற்குள் அவரது இரண்டாவது மனைவி அனுமதிக்காததால், சிறுவன் அழுது கொண்டே தெருவில் நின்றுள்ளான். இதற்கிடையே, சிறுவனின் தாய் தனது வீட்டை பூட்டிவிட்டு மாயமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுவன் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்ததால், அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கணவன், மனைவி பிரச்சினை காரணமாக, சிறுவன் நடுத்தெருவில் பரிதவித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Next Story