யானைகளின் உடல்நலன் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முதன்மை தலைமை வனப்பாதுகாவலருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வளர்ப்பு மற்றும் கோவில் யானைகளின் பராமரிப்பு குறித்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், யானைகள் பிடிக்கப்படும் போது விதிமீறல் நடைபெறுவதாக புகைப்பட ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டதுடன், ஸ்ரீரங்கம் கோவில் யானைகளை பராமரிக்க, காவிரி அருகே கோவிலுக்கு சொந்தமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விழா காலங்களில் மட்டும் அவற்றை கோவிலுக்கு அழைத்து வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு வரவேற்பு தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து வளர்ப்பு யானைகளின் வீடியோ பதிவு தயாரிக்க வேண்டும் என்றும், யானைகளின் வயது, பாலினம் குறித்தும், அவை எப்படி பிடிக்கப்பட்டு வளர்ப்பு யானைகளாக மாற்றப்படுகின்றன? என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய முதன்மை தலைமை வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட்டனர். மேலும், அனைத்து கோவில் யானைகளின் உடல் நலம் குறித்து கால்நடை மருத்துவர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story