நீட் தாக்க ஆய்வுக்குழு அவசியமற்றது - மத்திய அரசு
நீட் தாக்கம் குறித்த ஆய்வுக்கு, மாநில அரசின் வரம்பு மீறிய செயல் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும் குழு அமைத்ததை எதிர்த்து, பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், வழக்கு தாக்கல் செய்தார். அதில், மத்திய சுகாதாரத் துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீட் தேர்வு சட்டமும், விதிகளும், அரசியல் சாசன அடிப்படை உரிமைகளை பறிப்பதாக கூற முடியாது எனவும், பொது நலனுக்காக நீட் கொண்டு வரப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் சட்டம் அமலாவதை மத்திய அரசு தீவிரமாக கவனிப்பதால், தமிழக அரசு, தனியாக குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது எனவும் கூறப்பட்டுள்ளது.
மாநில அரசு, தனது எல்லைக்குட்பட்ட விவகாரங்களில் மட்டும் விசாரணை ஆணையம் அமைக்க அதிகாரம் உள்ளதாகவும், நீட் பாதிப்பு குறித்த ஆய்வுக்கு குழு மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில், வரும் 13ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story