தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன் - 80 வயது மூதாட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார்

மகன் தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் வாழ வழியின்றி தவிப்பதாக 80 வயது மூதாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.
x
மகன் தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் வாழ வழியின்றி தவிப்பதாக 80 வயது மூதாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தள்ளாத வயதில் கண்ணீர் மல்க நிற்கும் இந்த மூதாட்டியின் பெயர் கோமளா பாய்.. வயது 80. 

3 பிள்ளைகளை பெற்ற இவர், சென்னையில் உள்ள காப்பகம் ஒன்றில் இருக்கிறார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவொற்றியூரில் வாழ்ந்து வந்தவர் தான் இவர். இவரின் கணவர் சேஷாசலம் எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். 

சேஷாசலத்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவே அவரின் பணி இவர்களின் மகன் கமலக்கண்ணனுக்கு கிடைத்துள்ளது. பணி நிரந்தரம் ஆகி செட்டிலான மகன், தன் தாயிடம் வந்து தனக்கு ஒரு வீடு வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது தன் மகன் தானே என கோமளா பாயும் ஒரு கிரவுண்டில் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். 

பின்னர் வீடு கட்ட லோன் தேவை என கூறவே அதற்கும் கோமளா பாய் உதவியுள்ளார். 

பின்னர் தனக்கு சொந்தமான வீட்டை விற்ற கோமளா பாய், 3 பிள்ளைகளுக்கும் அதை சரி சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார். பின்னர் தன் மகனின் பராமரிப்பில் இருந்துள்ளார் வயதான அந்த தாய். 

15 ஆண்டுகளாக கே.ஆர்.விஜயா, ராதிகா உள்ளிட்ட நடிகைகளின் வீட்டில் வேலை பார்த்து வந்த கோமளா பாய், அதற்காக பெற்ற சம்பளத்தை தன் மகனிடமே கொடுத்துள்ளார். 

ஒரு கட்டத்தில் தன் தாயிடம் இருந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியான பின் தன் மனைவி, குழந்தைகள் என செட்டிலாகி தன் தாயை விட்டு விலகினார். 

பின்னர் காப்பகத்திற்கு சென்ற அவருக்கு மாதம் மாதம் செலுத்த வேண்டிய கட்டணத்தை கூட மகன் செலுத்தாமல் உள்ளதாக கண்ணீர் மல்க தெரிவிக்கிறார் அந்த தாய்...

கணவர் பெயரில் வரும் பென்ஷன் பணத்தை கூட மகனே வாங்கிக் கொள்வதால் உணவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த தாய் கண்ணீர் வடிக்கிறார். 

எனவே தன்னை பராமரிக்காமல் விட்ட மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோமளா பாய் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.... 


Next Story

மேலும் செய்திகள்