மதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
x
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் திருக்கல்யாணத்தை காண பக்தர்களை கட்டுப்பாட்டுடன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும்... சாமி வீதி உலாவை சித்திரை வீதியில் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், சிவகங்கையை சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சிவஞானம்,  மற்றும் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே விழாவை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கொரோனா வைரஸ் 2 ஆவது அலை பரவுவதை தடுக்க பொது நலன் கருதியே அரசு கோவில் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிவித்தனர். விழாவை காண மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் நாள் தோறும் விழா முடிந்தவுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். மேலும், சித்திரை திருவிழாவின் போது, சிறப்பு பாஸ், விஐபி  பாஸ் என எதற்கும் அனுமதி கொடுக்க வேண்டாம்
எனவும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டன்ர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை, என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள், சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்