அப்பவே அப்படி..! எதிர்பாராமல் கிடைத்த முதல்வர் பதவி

தமிழக முதல்வராக இருந்த சிலருக்கு யாருமே எதிர்பாராத விதமாக அந்த பதவி வந்து சேர்ந்தது. அவர்கள் யார்..?
அப்பவே அப்படி..! எதிர்பாராமல் கிடைத்த முதல்வர் பதவி
x
அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவை தட்டும். அதை தக்க வைப்பதுதான் சாமர்த்தியம். புத்திசாலித்தனம். திறமை. என்றெல்லாம் சொல்வார்கள். 2016ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு யாருமே எதிர்பாராத விதமாக முதலமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்ததை தமிழக மக்கள் அறிவார்கள். இதைத்தான் பிரசாரங்களில் விமர்சனமாகவே பேசி வருகிறார், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். ஆனால், எதிர்பாராமல் முதல்வராக அமர்வது, தமிழகத்துக்கு புதிதல்ல. சுதந்திரம் பெற்றதும் நடைபெற்ற முதல் தேர்தலின் முடிவிலேயே எதிர்பாராத முதல்வர்தான் பதவிக்கு வந்தார். அந்த தேர்தலில் இடதுசாரிகள் உட்பட எதிர்க்கட்சிகள் அதிக இடங்களில் வென்ற நிலையில், இடதுசாரி முதல்வர் தான் பதவியேற்பார் என மக்கள் நினைத்தபோது மத்திய காங்கிரஸ்  அரசின் ஆதரவோடு சென்னை மாகாணமாக இருந்த தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தது. யாருமே எதிர்பாராத விதமாக  முதல்வரானார் ராஜாஜி. அப்போது அவர் எம்எல்ஏ கூட கிடையாது. அன்றைய சட்ட மேலவையில ஆளுநரின் நியமன எம்எல்சியாகி அதன் மூலம் முதல்வரானார்.

குலக்கல்வி போன்ற திட்டங்களால் அவரது இரண்டாண்டு ஆட்சி கடும் விமர்சனத்துக்குள்ளானதால் 1954ல் எதிர்பாராத விதமாக முதல்வரானார் காமராஜர். அப்போது காமராஜர் எம்எல்ஏவோ, எம்எல்சியோ கிடையாது. நாடாளுமன்ற மக்களவை எம்பியாக இருந்தார். முதல்வர் ஆவதற்காக, எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்த அவர், அதன்பிறகு, குடியாத்தம் தொகுதியின் இடைத்தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆனார். 1963ல் காமராஜர் பதவி விலகியதும் பக்தவத்சலம் முதல்வரானதும் எதிர்பாராததுதான். 1967 தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றியபோது  அண்ணா முதல்வராவார் என்பது அனைவரும் எதிர்பார்த்தது. ஆனால் அந்த தேர்தலில், அவர் எம்எல்ஏவுக்கு போட்டியிடவில்லை. நாடாளுமன்ற தேர்தலும் சேர்ந்து நடைபெற்றதால் தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வென்றிருந்தார், அண்ணா. திமுக அதிக இடங்களில் வென்றதும் எம்பி பதவியை நிராகரித்து விட்டு முதல்வரானார். அண்ணா மறைந்ததும் இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் இருந்தார். அப்போது, திமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருந்தபோதும், யாருமே எதிர்பாராமல் 45 வயதே ஆன கருணாநிதி முதல்வரானதும் ஆச்சரியமே.

இதுபோல 1987ம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்ததும் அவரது மனைவி ஜானகி அம்மாள், முதல்வரானதும், தமிழக மக்கள் எதிர்பாராததுதான். 23 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்த ஜானகி அம்மாள் தான், தமிழக வரலாற்றிலேயே எம்எல்ஏவாக இல்லாமலேயே முதல்வராக இருந்தவர். 2001 தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா முதல்வரான நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அவர் பதவி விலகியபோது, முதல்முறை எம்எல்ஏவாக பேரவையில் இருந்த  ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் பதவி தேடி வந்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை. இவர்கள் எல்லோரையும் விட ஒருவர் மிக மிக அதிர்ஷ்டசாலி. அவர் யார் தெரியுமா? சுதந்திரத்துக்கு முன், 1937ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல்வரான  வெங்கட ரெட்டி. அந்த தேர்தலில் 100க்கும் அதிகமான இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, ஆட்சியமைக்க மறுத்ததால் 21 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்த  நீதிக் கட்சிக்கு ஜாக்பாட் அடித்து, முதல்வரானார், அந்த கட்சியின் வெங்கட ரெட்டி. தமிழக தேர்தல் வரலாற்றில் இது போன்ற சுவாரஸ்யங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக அடுத்தடுத்த அ்பபவே அப்படி தொகுப்பில் பார்ப்போம்..

Next Story

மேலும் செய்திகள்