பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசு கொலை - கொலை செய்த குழந்தையின் பாட்டி கைது

உசிலம்பட்டி அருகே பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசு, மூச்சு திணறடித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது...
பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசு கொலை - கொலை செய்த குழந்தையின் பாட்டி கைது
x
பெண் சிசு கொலை.... 90'களுக்கு முன்பு வரை தமிழகத்தில் அதிகமாக அரங்கேறி வந்தது... பின்னர் விழிப்புணர்வு காரணமாகவும், அரசின் பல்வேறு நடவடிக்கைகளாலும், பெண் சிசு கொலை குறைந்தது... ஆனாலும் அவ்வப்போது இந்த கொடூர சம்பவம் ஆங்காங்கே நடைபெற்றே வந்தன... இந்நிலையில் மேலும் ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.... உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி - சிவப்பிரியா தம்பதிக்கு 5 வயதிலும், 2 வயதிலும் இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவர்களுக்கு 3வதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது... பிறந்த 7 நாட்கள் ஆன நிலையில், அந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர், குழந்தையின் பெற்றோர்... ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்த போது குழந்தை உயிரிழந்திருப்பது தெரியவந்தது... அதே நேரம், குழந்தையின் உடலில் காயங்கள் இருந்துள்ளன... இதை கண்ட மருத்துவர்கள் சந்தேகத்தின் பேரில், மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடலை அனுப்பி வைத்துள்ளனர்.  

இதையடுத்து, 5 பேர் கொண்ட மருத்துவ குழு உடற்கூராய்வு செய்த நிலையில், குழந்தைக்கு செயற்கை முறையில் மூச்சுத்திணறல் ஏற்படுத்தப்பட்டது தெரிய வந்தது... இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை செய்தனர்... இதையடுத்து, குழந்தையின் பாட்டி நாகம்மாளை போலீசார் கைது செய்தனர்... அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குழந்தையை கொன்ற அதிர்ச்சி சம்பவம் உறுதியானது.

தலையணையால், மூச்சை திணறடித்து குழந்தையை கொலை செய்துள்ளார் நாகம்மாள்... குழந்தைக்கு பால் ஆகாரங்கள் கொடுப்பதையும் தொடர்ந்து தவிர்த்து வந்ததாக  அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார், நாகம்மாள்... இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பல்வேறு துறைகளிலும் பெண்கள் அதிவிரைவாக முன்னேறி வரும் இந்த கால கட்டத்தில், உசிலம்பட்டியில் நடைபெற்ற இந்த பெண் சிசு கொலை சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது...

Next Story

மேலும் செய்திகள்