ஐஐடியில் ஓபிசி இடஒதுக்கீடு நீக்கப்படவில்லை - ஜோதிமணி எம்.பி. கேள்விக்கு அமைச்சர் பதில்

நீட், ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் ஓ.பி.சி. பிரிவில் இட ஒதுக்கீடு நீக்கப்படவில்லை என சமூக நீதித்துறை இணையமைச்சர் கிருஷ்ணன் பால் விளக்கம் அளித்துள்ளார்.
ஐஐடியில் ஓபிசி இடஒதுக்கீடு நீக்கப்படவில்லை - ஜோதிமணி எம்.பி. கேள்விக்கு அமைச்சர் பதில்
x
நீட், ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் ஓ.பி.சி. பிரிவில் இட ஒதுக்கீடு நீக்கப்படவில்லை என சமூக நீதித்துறை இணையமைச்சர் கிருஷ்ணன் பால் விளக்கம் அளித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களில் ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு நீக்கப்பட்டுள்ளதா என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.


மின் உற்பத்தி திட்டங்களை தொடங்குவதற்கு, பல்வேறு தீவுகளை சீனாவுக்கு இலங்கை வழங்கியதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில், அவர் இதனை தெரிவித்தார். மேலும் பேசிய அவர், டெல்லியில் போராடும் விவசாயிகளை போராட்ட ஜீவிகள் என்று பிரதமர் மோடி அழைப்பது, அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என்று திருமாவளவன் கண்டித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் பொறுப்பாகும் என திருமாவளவன் எம்.பி. கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதிலளித்துள்ளார். தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, குற்றவியல் சட்டத்தில் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளதையும், பாலியல் வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என்ற விதிகள் இருப்பதை சுட்டிக்காட்டி மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 108 அகதிகள் முகாமில் மொத்தம் 58,843 இலங்கை தமிழர்கள் வசித்து வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகள் எண்ணிக்கை குறித்து மக்களவை உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், முகாம்களை தவிர்த்து காவல் துறை அனுமதியுடன் 34,134 பேர் அகதிகளாக வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஒடிசாவில் உள்ள முகாவில் 58 பேர் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான நிதியை வீடு ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய அவர், தலித் சமூகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மேக்நாத் சாஹாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்றும், விழுப்புரத்தில் சைனிக் பள்ளி, ஏகலவ்யா பள்ளி துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீட்டு உரிமையை அடிப்படை உரிமையாக மாற்ற சட்டத் திருத்தம் கொண்டுவரும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என ரவிக்குமார் எம்.பி மக்களவையில் கேள்வி எழுப்பினார். இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் கூறி வரும் நிலையில், அதனை பாதுக்காக அரசு நடவடிக்கை எடுத்தது  குறித்து ரவிக்குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சமூக நீதித்துறை அமைச்சர் ரட்டன்லால் கட்டாரியா, பதவி உயர்வில் எஸ்.சி. எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்