சாக்கு மூட்டையில் சடலம் - ரகசியக் காதல் கொடூரம்

மீஞ்சூர் அருகே மனைவியின் காதலனை கொலை செய்து, சாக்கு மூட்டையில் எடுத்துச் சென்ற கணவர், பிடிபட்டிருக்கிறார்.
சாக்கு மூட்டையில் சடலம் - ரகசியக் காதல் கொடூரம்
x
மீஞ்சூர் அருகே மனைவியின் காதலனை கொலை செய்து, சாக்கு மூட்டையில் எடுத்துச் சென்ற கணவர், பிடிபட்டிருக்கிறார். இந்த அதிர்ச்சிச் சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

காட்டூர் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, புயல் வேகத்தில் வந்த ஸ்கூட்டி ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்டிருக்கிறார்கள். தடைகளைத் தாண்டி அந்த வண்டி சிட்டாகப் பறந்து சென்றிருக்கிறது. சந்தேகமடைந்த போலீசார், ஸ்கூட்டியை துரத்திச் சென்று தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். வண்டியில் சென்றது ஒரு கணவனும் மனைவியும். அவர்களிடம் பெரிய சாக்கு மூட்டை ஒன்று இருந்திருக்கிறது. அதோடு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் வலுக்கவே, போலீசார் அந்த சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்திருக்கிறார்கள். அதற்குள்... பழைய துணிகளுக்கு நடுவே, ரத்த காயங்களோடு 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள். கையும் களவுமாக சிக்கிக் கொண்டதால் குற்றவாளிகளால் உண்மையை மறைக்க முடியவில்லை... தகாத உறவின் காரணமாக இந்தக் கொடூரம் அரங்கேறியது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த ராமநாதபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் தேவேந்திரசிங். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய மனைவி சாயா. கடந்த 8 மாதங்களாகத்தான் இவர்கள் இந்தப் பகுதியில் வசித்திருக்கிறார்கள். அதே பகுதியில், உத்திரபிரசேத மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவரும் தங்கியிருக்கிறார். இவர்கள் மூவருமே கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்திருக்கிறார்கள்.

ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் மனோஜோடு தேவேந்திரசிங் நெருக்கமாகப் பழகியிருக்கிறார். அந்தப் பழக்கம் வீடு வரை வந்திருக்கிறது. அது தான் சாயாவுக்கும் மனோஜுக்கும் ரகசிய காதல் உருவாக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தேவேந்திரசிங் வேலைக்குச் செல்லும் நேரங்களில், மனோஜ் சாயாவோடு இருப்பதையே வேலையாகச் செய்து வந்திருக்கிறார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.

பழகிய சில மாதங்களிலேயே மனோஜ் சாயா மேல் பைத்தியமாக இருந்திருக்கிறார். அவரில்லாத வாழ்கையை அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. வாழ்வோ சாவோ அது சாயாவோடு தான் என்று முடிவு செய்திருக்கிறார்.

சம்பவம் நடந்த அன்று சாயாவின் வீட்டிற்கு சென்ற மனோஜ், தேவேந்திரசிங்கை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி அழைத்திருக்கிறார். சாயா அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, மனோஜ் நொறுங்கிப் போயிருக்கிறார். எப்படியாவது அவரை அடைந்துவிட வேண்டும் என்ற வெறியில், தன்னுடன் வரவில்லை என்றால் இருவரும் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களை தேவேந்திரசிங்கிடம் காட்டிவிடுவதாக மிரட்டியிருக்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த தேவேந்திரசிங் திடீரென வீட்டுக்கு வந்திருக்கிறார். மனைவியுடன் மனோஜ் இருப்பதைக் கண்டு ஆத்திரம் அடைந்தவர், உருட்டுக்கட்டையால் மனோஜை சரமாரியாகத் தாக்கியதுடன், மனைவியின் கண் எதிரே சுத்தியலால் அடித்து மனோஜை கொலை செய்திருக்கிறார். 

பின்னர், கொலையை மறைக்க கணவன்-மனைவி இருவரும் மனோஜின் உடலை சாக்கு மூட்டையில் கட்டியிருக்கிறார்கள். நள்ளிரவில் அதை எடுத்துச்சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அப்புறப்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள். அப்படிச் செல்லும் வழியில்தான் போலீசாரிடம் வசமாக சிக்கியிருக்கிறார்கள். 

துரோகமும் ஆத்திரமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டால் சர்வ நாசம் என்பதைத்தான் காட்டியிருக்கிறது இந்த கோடூரச் சம்பவம்!

Next Story

மேலும் செய்திகள்