மதுபோதையில் தகராறு - மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்

மதுபோதையில் மகளையும் பேத்தியையும் துன்புறுத்தி வந்த மருமகனை மாமனாரே வெட்டிக் கொன்ற சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுபோதையில் தகராறு - மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்
x
மதுபோதையில் மகளையும் பேத்தியையும் துன்புறுத்தி வந்த மருமகனை மாமனாரே வெட்டிக் கொன்ற சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கேணிக்கரையை சேர்ந்தவர் நாகநாதன். இவருக்கும் பொதுவக்குடியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகள் சங்கீதாவுக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். அங்கன்வாடியில் சத்துணவு அமைப்பாளராக சங்கீதா வேலை பார்த்து வந்த நிலையில் நாகநாதன் எந்த வேலைக்கும் செல்லாமல் சுற்றி வந்ததாக தெரிகிறது. 

மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை துன்புறுத்தி வந்துள்ளார். திருமணம் செய்து கொடுத்த மகள் மகிழ்ச்சியாக தான் வாழ்கிறார் என நினைத்திருந்த கருப்பையாவுக்கு மருமகனின் செயல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

பலமுறை அன்பாக எடுத்துக் கூறியும் நாகநாதன் தன் குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என தெரிகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் விரக்தியடைந்த கருப்பையா, தன் மருமகன் தன் மகளுக்கு கொடுக்கும் தொல்லைகள் குறித்து எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் நாகநாதனை அழைத்து எச்சரித்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த நாகநாதன் மேலும் குடித்து விட்டு வந்து மீண்டும் தன் மனைவி, பிள்ளைகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் வெறுத்துப் போன கருப்பையா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மருமகனை வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பின்னர் நேராக எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு சென்ற கருப்பையா நடந்ததை கூறி சரணடைந்தார். நாகநாதனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகனை மாமனாரே வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்