நண்பனிடம் பணம் பறிக்க பலே நாடகம்

சென்னையில் நண்பனிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகம் நடத்திய நபர் போலீசாரிடம் வசமாக சிக்கியதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
நண்பனிடம் பணம் பறிக்க பலே நாடகம்
x
சென்னையில் நண்பனிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகம் நடத்திய நபர் போலீசாரிடம் வசமாக சிக்கியதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரஃபிக். பங்குச்சந்தையில் பணம் முதலீடு செய்து வரும் இவர் வசம் எப்போதும் பணம் அதிகளவில் புழங்கும்.

இவருடைய நண்பர் விஜயகுமார். எம்கேபி நகரை சேர்ந்த இவர் ரபீக்கை தன்னுடைய வீட்டிற்கு மதுகுடிக்க அழைத்துள்ளார். இதனை நம்பி விஜயகுமார் வீட்டுக்கு சென்ற ரபீக், மது குடித்துள்ளார். 

அப்போது திடீரென வந்த 5 பேர் கொண்ட கும்பல், தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்தி உள்ளது. 2 பேரையும் விசாரிக்க வேண்டும் என கூறிய அந்த கும்பல், ரபீக் மற்றும் விஜயகுமாரை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றது. 

காரில் செல்லும் போது தான் தாங்கள் கடத்தப்பட்டதை அறிந்தனர். ரபீக்கிடம் இருந்த ஏடிஎம் கார்டை பறித்த அந்த கும்பல், காரை நிறுத்தி கணக்கில் இருந்து இரண்டரை லட்ச ரூபாய் பணத்தை எடுத்துள்ளது. பின்னர் அதிகாலை வரை இருவரையும் காரில் வைத்துக் கொண்டு சுற்றிய அந்த கும்பல், ஒரு கட்டத்தில் மாதவரம் ரவுண்டானா பகுதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றது. 

காரில் இருந்து இறங்கிய ரபீக் தன் நண்பர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு நேராக எம்கேபி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இருவரும் வீடு வந்து சேர்ந்த நிலையில் விஜயகுமார் எந்த சலனமும் இன்றி இயல்பாக இருந்தது ரபீக்கின் நண்பர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

இதனால் அவர்கள் விஜயகுமாரை பின்தொடர்ந்து சென்ற போது தான் அந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. போலியான ஆட்களை வைத்து கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது விஜயகுமார் என்பதை அறிந்த நண்பர்கள், அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கடத்தலுக்கு உதவிய காசிம் என்பவரும் கைது செய்யப்பட்டார். 

ரபீக்கிடம் அதிகளவில் பணம் இருப்பதை அறிந்து கொண்ட விஜயகுமார், அதை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடத்தலில் ஈடுபட்டது உறுதியானது. இதற்காக காசிம் என்பவரை அணுகிய விஜயகுமார், 5 பேரை போலீஸ் போல நடிக்க வைத்து பணத்தை அபகரித்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

ரபீக்கை மட்டும் கடத்தினால் சிக்கிவிடுவோம் என தெரிந்து கொண்ட விஜயகுமார், தன்னையும் கடத்த வேண்டும் என கூறியிருக்கிறார். அதன்பேரில் அந்த கும்பலும் 2 பேரை கடத்துவது போல நாடகமாடி பணம் பறித்திருக்கிறது. 

இதையடுத்து போலீஸ் என கூறி பணம் பறித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்