மகனின் குழந்தை பேறுக்காக சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம் - நகை, பணத்திற்காக பெண்ணை வெட்டிக் கொன்ற கொடூரம்

மகனுக்கு குழந்தை பேறு வேண்டி பரிகாரம் செய்ய சென்ற பெண் ஒருவர் கொள்ளை கும்பலால் வெட்டிக் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மகனின் குழந்தை பேறுக்காக சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம் - நகை, பணத்திற்காக பெண்ணை வெட்டிக் கொன்ற கொடூரம்
x
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், செம்மாண்டம்பாளையம் சாலையில் பர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வருகிறார் 65 வயதான ஆறுமுகம்...இவரின் மனைவி ஈஸ்வரி. 

இவர்களுக்கு உதயா என்ற மகன் உள்ளார். மகனுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என தெரிகிறது. பேரக் குழந்தைகளை ஆசை தீர கொஞ்ச வேண்டும் என ஆசைப்பட்ட ஆறுமுகமும் அவரது மனைவியும் போகாத கோயில்கள் இல்லை... வேண்டாத தெய்வங்களும் இல்லை...ஆனால் பரிகாரம் செய்தால் மகனுக்கு குழந்தை பிறக்கும் என சிலர் சொன்னதை கேட்டு அதற்கான முயற்சியிலும் இவர்கள் இறங்கி உள்ளனர். இதை அறிந்து கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று இவர்களை தேடி வந்துள்ளது. 

குழந்தை பிறப்பதற்காக பரிகாரம் ​செய்து தருகிறோம் என கூறிய அந்த மர்ம கும்பல், ஆறுமுகத்தின் பர்னிச்சர் கடைக்கு அதிகாலையில் வந்துள்ளது. பல மணி நேரமாக பூஜைகளை செய்த அந்த கும்பலின் செயல் சாட்சாத் மந்திரவாதிகளை போலவே இருந்ததாக தெரிகிறது... பூஜைகள் முடிந்துவிட்டது.. காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்கள் என கூறியிருக்கிறது அந்த கும்பல்.. அப்போது ஆறுமுகமும், ஈஸ்வரியும் காலில் விழுந்து மண்டியிட்ட போது தான் அந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது... 

இருவரும் காலில் விழுந்த நேரம் பார்த்து தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் இருவரையும் வெட்டிச் சாய்த்தது அந்த கும்பல்... இதில் படுகாயமடைந்த ஈஸ்வரி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்... 

பின்னர் அவர்களிடமிருந்து ஐந்து சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த அந்த கும்பல், கடையை பூட்டி சென்றுள்ளது. 

படுகாயமடைந்த ஆறுமுகமோ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஈஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்...

இவர்களை மந்திரவாதிகள் என கூறி நம்ப வைத்தது யார்? பர்னிச்சர் கடைக்குள் வந்து பூஜைகளை செய்தது எப்படி? என போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மகனுக்கு நல்லது நடக்க வேண்டும் என விரும்பிய முதியவர்களுக்கு அரங்கேறிய இந்த கொடூரம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது....


Next Story

மேலும் செய்திகள்