சென்னையை சேர்ந்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய காசி - சிபிசிஐடி போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பகீர் தகவல்

காருக்குள் இளம்பெண்ணிடம் அத்துமீறிய நாகர்கோவில் காசி, கைக்கடிகாரத்தில் உள்ள கேமராவில் அதை பதிவு செய்து மிரட்டியதாக சிபிசிஐடி போலீசார் நடத்தி வரும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையை சேர்ந்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய காசி - சிபிசிஐடி போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பகீர் தகவல்
x
சமூக வலைதளங்களில் உள்ள பெண்களிடம் நட்பாக பழகி அவர்களை காதலிப்பது போல நடித்து கடைசியில் அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய  நாகர்கோவில் காசி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஏற்கனவே காசி மீது 5 பெண்கள் மற்றும் ஒரு கந்துவட்டி புகார் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காசி மீது அளித்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் காசியை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அப்போது அவர் சிபிசிஐடி போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியின் உச்சம்... இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சென்னை இளம்பெண்ணிடம் நட்பாக பேச ஆரம்பித்து இருக்கிறார் காசி. இவர்களின் உரையாடல்கள் செல்போன் வரை நீளவே, ஒரு கட்டத்தில் காதல் நாடகத்தையும் அரங்கேற்றி இருக்கிறார் காசி. காதலியை தேடி சினிமா பாணியில் சென்னைக்கு வந்த காசி மீது இளம்பெண்ணுக்கு நம்பிக்கை வரவே, ஒரு கட்டத்தில் காதலனை தேடி கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். அப்போது காரில் வைத்து அந்த மாணவியிடம் அத்துமீறியுள்ளார் காசி. நடந்த சம்பவங்களை எல்லாம் தன் கைக்கடிகாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவு செய்து கொண்ட அவர், அதை காட்டி மிரட்டியே அவரிடம் பலமுறை அத்துமீறியிருக்கிறார். ஆனால் நடந்த சம்பவங்களை எல்லாம் அந்த பெண் யாரிடமும் சொல்லாமல் மவுனம் காத்து வந்துள்ளார். காசியின் மீது பெண்கள் பலரும் புகார் அளித்ததன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவே, இப்போது துணிச்சலாக வெளிவந்த இளம்பெண் புகார் அளித்துள்ளார். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் எல்லாம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காசி மீது மேலும் பல பெண்கள் புகார் அளிக்க முன்வரலாம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், கம்ப்யூட்டர் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளில் ஏராளமான பெண்களின் ஆபாச படங்கள் உள்ளதாகவும், அதில் உள்ள பெண்களிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்