திருமண ஆசையில் இருந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் - பெண் பார்ப்பதாக ஆசை காட்டி அழைத்துச் சென்று கொலை

திருமண ஆசையில் இருந்த இளைஞர் ஒருவரை பெண் பார்க்க அழைத்துச் செல்வதாக அவரை கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருமண ஆசையில் இருந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் - பெண் பார்ப்பதாக ஆசை காட்டி அழைத்துச் சென்று கொலை
x
சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள அழிஞ்சிமேடு கிராமத்தில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் மின் கம்பத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் கடந்த 10ஆம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலையானவரின் பெயர் சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது. 27 வயதான இவர் சென்னையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். 

சீர்காழி அருகே உள்ள எடமணல் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், சொந்த ஊரில் தங்கியிருந்த நிலையில் சம்பவத்தன்று சென்னைக்கு செல்வதாக கூறி புறப்பட்டவர் சடலமாக மீட்கப்பட்டது உறுதியானது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் தான் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. 

பார்ப்பதற்கு சுமாரான தோற்றம் உள்ளதால் தனக்கு பெண் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார் சந்தோஷ் குமார். பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்காத சோகத்தில் இருந்த அவர், தன் நண்பர்களிடம் தனக்கு  பெண் பார்க்குமாறும் உதவி கேட்டுள்ளார். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட புதுச்சத்திரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், விழுப்புரத்தை சேர்ந்த ராஜேஷ், விருத்தாச்சலத்தை சேர்ந்த சுப்ரமணி ஆகிய 3 பேரும் சந்தோஷ் குமாரை அணுகி உள்ளனர். 

திருமணம் செய்ய பெண் ஒருவர் இருப்பதாகவும், அவரை பார்க்க நேரில் அழைத்துச் செல்வதாகவும் 3 பேர் கூறியதை கேட்டு கல்யாண ஆசையில் சென்றுள்ளார் சந்தோஷ்குமார். சிதம்பரம் புறவழிச்சாலைக்கு அழைத்துச் சென்ற அவர் திடீரென சந்தோஷ் குமாரின் கை, கால்களை கட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த ஒரு லேப்டாப், 2 செல்போன்களையும் அந்த கும்பல் திருடிச் சென்றது. 

சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்த போது, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒப்புக் கொண்டனர். சந்தோஷ்குமாரிடம் நகை, பணம் அதிகம் இருக்கும் என நினைத்து அவரை ஆசை காட்டி வரவழைத்து கொன்றதாகவும் அவர்கள் கூறியது அதிர்ச்சி ரகம்... 

முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகி அவர்களை நம்பிச் சென்றால் ஆபத்து நேரும் என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த சம்பவம். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கனவில் இருந்தவர் இன்று கொடூரமாக தன் உயிரை விட்டதும் சோகத்தின் உச்சம்... 


Next Story

மேலும் செய்திகள்