"விசாரணை என்ற பெயரால் அடிக்கடி வீட்டிற்கு வந்து தொல்லை" : கூடி வந்த திருமணம் பாதியில் நின்ற சோகம் - விரக்தியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

விசாரணை என்ற பெயரில் போலீசார் அடிக்கடி வீட்டுக்கு வந்ததால் திருமண வாழ்க்கை தடைபட்ட விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணை என்ற பெயரால் அடிக்கடி வீட்டிற்கு வந்து தொல்லை : கூடி வந்த திருமணம் பாதியில் நின்ற சோகம் - விரக்தியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
x
நெல்லை மாவட்டம் கொண்ட நகரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மீது சுத்தமல்லி, சீதபற்ப நல்லூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக போலீசார் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து விசாரணை நடத்துவது வழக்கம். 

மாரியப்பனின் சகோதரியான இசக்கியமாளுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து வந்த நிலையில் அண்ணன் மீதான வழக்குகளே அதற்கு தடையாக இருந்துள்ளது. இதனை அறிந்த அண்ணன் மாரியப்பன், தன் தங்கையின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு தான் திருந்தி வாழ்வதாக காவல் நிலையத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

இதனால் மகிழ்ந்து போன குடும்பம், இசக்கியம்மாளுக்கு வரன் தேடும் பணியை தொடர்ந்தது. அந்த சமயம் பார்த்து இவர்களின் உறவினர் ஒருவர் இசக்கியம்மாளை திருமணம் செய்ய முன் வந்துள்ளார். இதனால் திருமண கனவில் இருந்துள்ளார் அந்த இளம்பெண். தடைபட்ட திருமணம் கைகூடி வந்த மகிழ்ச்சியில் இருந்த இசக்கியமாளுக்கு அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. 

ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கு ஒன்றை மீண்டும் தூசி தட்டிய காவல்துறை அதை விசாரிப்பதற்காக மாரியப்பன் வீட்டுக்கு வந்துள்ளனர். இந்த செய்தி இசக்கியம்மாளை திருமணம் செய்ய இருந்தவரின் வீட்டுக்கும் சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த அவர்கள், திருமண முயற்சியை கைவிட்டுள்ளனர். அவர்களின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்தார் இசக்கியம்மாள். 

விரக்தியில் இருந்த அவர், திடீரென விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் பலியானார். 

அதேநேரம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். காவல்துறையின் செயலால் இளம்பெண் ஒருவர் தன் உயிரை  மாய்த்துக் கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்