கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்ய திட்டம் - கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவி சதி திட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்டு விட்டு, மனைவி நாடகமாடியது தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியிலுள்ள கேசவ திருப்பால்புரத்தை சேர்ந்த கணேஷ் , வீடியோ கிராபராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு தற்போது நான்கு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கணவனும் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக அவரது மனைவி கூறியதை அடுத்து, கணேஷை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் தம்மை இருட்டில் யாரோ தாக்கியதாக கணேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததை அடுத்து, போலீஸ் நடத்திய விசாரணையில், கணேஷை அவரது மனைவியே கூலிப்படை ஏவி கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.காயத்ரிக்கும் மதுரையை சேர்ந்த யாசின் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், யாசினுக்கு தனது கணவரின் பெயரில் உள்ள வீட்டுப் பத்திரத்தை வங்கியில் வைத்து காயத்ரி பத்து லட்ச ரூபாய் கடன் பெற்றுக் கொடுத்ததும் தெரியவந்தது. இதற்கு கணேஷ் இடையூறாக இருந்ததால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவரை 20 கிலோ கொண்ட சுத்தியலால் தலையில் அடித்து யாசின் மற்றும் கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார் ஆகிய இருவரும் தாக்கியுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த யாசினை போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story