12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - தாயின் கள்ளக்காதலனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்
புதுக்கோட்டையில் தாயின் கள்ளக்காதலனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து தன் 12 வயது மகளுடன் வாழ்ந்து வந்தார்... தனிமையில் வசித்து வந்த இவருக்கு செங்கை தோப்பு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கணேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் 6 வருடங்களாக கணவன், மனைவி போலவே வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் கணேசன் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதும் வாடிக்கையாகி போனது. காதலியை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்து சென்ற அவருக்கு, அங்கிருந்த 12 வயது சிறுமி மீது பார்வை விழுந்துள்ளது.
ஏழாம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி, இதெல்லாம் தெரியாமல் தன் படிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார். சிறுமியை அடைந்தே தீருவது என திட்டம் தீட்டிய கணேசன், சம்பவத்தன்று தூக்க மாத்திரைகளுடன் காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து காதலிக்கும் அவரது மகளுக்கும் கொடுத்த கணேசன், தான் நினைத்தபடியே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்...
தூக்கம் தெளிந்து எழுந்த சிறுமிக்கு தனக்கு நேர்ந்த கொடூரம் தெரியவரவே, பதறிப் போனார். வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் புழுங்கிய சிறுமி, தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மகளின் சடலத்தை பார்த்த தாய், கதறி அழுதபடி போலீசாருக்கு தகவல் சொன்ன போது தான் நடந்த அத்தனை விபரீதங்களும் வெளி உலகுக்கு தெரியவந்தது.
சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த கணேசனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியின் தாயிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...
பிரேத பரிசோதனை முடிவில் தான் சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா? என்பது தெரியவரும்.
Next Story