இசை உலகை விட்டுப் பிரிந்தார் எஸ்.பி.பி. - தேகம் மறைந்தாலும் இசையாய் காற்றில் மலர்ந்த எஸ்.பி.பி.

பொறியாளராக வேண்டும் என்று கனவு கண்டவர், தமிழ்த் திரையுலகை தன் வசீகரக் குரலால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிப்போட்டார். மறைந்த பின்னணி பாடகர், எஸ்.பி.பி.யின் திரைப்பயணத்தையும், வாழ்க்கைப் பயணத்தையும் திரும்பிப் பார்க்கலாம்.
இசை உலகை விட்டுப் பிரிந்தார் எஸ்.பி.பி. - தேகம் மறைந்தாலும் இசையாய் காற்றில் மலர்ந்த எஸ்.பி.பி.
x
1946 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் 1966 ல் கன்னடத் திரைப்படத்தில் பாடகராக அறிமுகமானார். தமிழில் 1969 ல் வெளியான சாந்தி நிலையம் திரைப்படம் மூலம் தனது பயணத்தை தொடங்கினார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையக்கன்னி பாடல்தான் அவரது முதல்பாட்டு.

அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா... பாடலைப் பாடுவதற்காக எம்.ஜி.ஆரே. எஸ்.பி.பி. தான் பாடவேண்டும் என்று தேர்வுசெய்த பெருமை இவருக்கு உண்டு.

1980 ல் முறையான சங்கீதம் தெரியாது என்பதால் சங்கராபரணம் திரைப்படத்திற்காக  பாடல் பாட மறுத்ததாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு அர்ப்பணிப்புடன் கூடிய நீண்ட பயிற்சிக்குப் பிறகு பாடி அசத்திய எஸ்.பி.பி., அப்பாடலுக்காக முதல்முறையாக தேசிய விருதையும் பெற்றார்.

திரைப்படங்களில் இளையராஜாவின் இசை என்றாலே எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாடல்கள் தவறாமல் இடம்பெற்றுவிடும். அந்தளவிற்கு இளையராஜா- எஸ்.பி.பி. கூட்டணியில் வரும் பாடல்கள் உலகமெங்கும் இருக்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

சங்கீத ஜாதி முல்லை, மலையோரம் வீசும் காற்று உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்திருக்கிறது, இளையராஜா-எஸ்.பி.பி, கூட்டணி.

இதேபோல், ஏ.ஆர்.ரஹ்மானும் திரைத்துறைக்கு வந்த பின் எஸ்.பி.பி. இன் தனித்துவமான குரலை தன் இசையில் கூட்டி மெருகேற்றிக்கொண்டார்.

மனம் மயக்கும் மெல்லிய காதல் பாடல்கள் முதல் அதற்கு நேர் எதிராக உச்ச ஸ்தாயியிலும் பாடல்கள் என்றால் அதற்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் இசையமைப்பாளர்கள் பலரின் விருப்பமாக இருக்கும்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா... பாடலில் உச்ச ஸ்தாயியின் அதிரடி இசைக்கேற்ப தன் குரலை தகவமைத்துக் கொண்டிருப்பார் எஸ்.பி.பி.

இதேபோல் இசையமைப்பாளர்கள் தேவா, வித்யாசாகர், கீரவானி, ராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரது இசையிலும் எஸ்.பி.பி. ஆகச்சிறந்த பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.

இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் ஏக் துஜே கேலியே திரைப்படத்தில் எஸ்.பி.பி. இன் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஆகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்பாடல் எஸ்.பி.பி.க்கு மேலும் ஒரு தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.

இந்தித் திரையுலகில் சல்மான்கானுக்கு குரல் கொடுத்திருப்பதுடன் பிரபல பாடகி லதா மங்கேஷ்கருடன் இணைந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலிவுட்டில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்காகப் பாடினார்.

இவ்வாறு, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார், எஸ்.பி.பி.

இதேபோல் ஒரே நாளில் அதிகபட்சமாக 21 பாடல்களைப் பாடியும் உலக சாதனை படைத்திருக்கிறார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை 6 முறை பெற்றிருக்கும் எஸ்.பி.பி. கணக்கிலடங்காத இதர பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். இயக்குனர் வசந்தின் கேளடி கண்மணி திரைப்படத்தில் கதாநாயகனாகவும், நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இத்திரைப்படத்தில் மூச்சுவிடாமல் பாடிய மண்ணில் இந்த காதலன்றி... பாடல் எஸ்.பி,பி.இன் திரைப்பயணத்தில், மற்றுமொரு மைல்கல்லாக அமைந்தது.


பின்னணிப் பாடகர் மட்டுமல்லாமல் பின்னணிக் குரல் கலைஞராகவும் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தனது திறமையை நிரூபித்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக, விளங்கும், எஸ்.பி.பி. இசையுலகின் தனிப்பெரும் சகாப்தம் என்றால் மிகையல்ல.


Next Story

மேலும் செய்திகள்