உயிரை குடித்த ப‌ப்ஜி, ஆன்லைன் ரம்மி - செல்போனுக்கு அடிமையான 14 வயது சிறுவன்

ப‌ப்ஜி, ஆன்லைன் சூதாட்டம் பறித்த உயிர்களின் பட்டியலில் கன்னியாகுமரியை சேர்ந்த 14 வயது சிறுவனும் இடம் பிடித்துள்ளான்...
உயிரை குடித்த ப‌ப்ஜி, ஆன்லைன் ரம்மி - செல்போனுக்கு அடிமையான 14 வயது சிறுவன்
x
ஊரடங்கு தொடங்கியது முதலே கொரோனா ஒருபக்கம் மக்களை கொன்று குவிக்க.... மற்றொரு பக்கம் இளசுகளை கொன்று குவித்து கொண்டிருக்கின்றன இந்த செல்போன்கள்... குறிப்பாக டிக்டாக், ப‌ப்ஜி, ஆன்லைன் ரம்மி போன்ற செயலிகள், பெரும்பாலான இளசுகளை அடிமையாக்கி வைத்திருந்தன. இதனால் மத்திய அரசு, டிக்டாக் , ப‌ப்ஜி போன்ற சீன செயலிகளுக்கு தடை விதித்து, பெற்றோரிடையே நிம்மதியை ஏற்படுத்தியது. 

துரதிருஷ்டவசமாக ப‌ப்ஜி கேமை புதிதாகத்தான் பயன்படுத்த முடியவில்லையே தவிர, ஏற்கனவே செல்போன்களில் இருக்கும் பட்சத்தில் விளையாட முடிகிறது... இதன் காரணமாக ஏற்கனவே அந்த கேமிற்கு அடிமையானவர்கள் இன்றும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள்... அதில் ஒரு சிறுவன் தான் அந்த கேமிற்காகவே தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளான்... 

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்த ராஜகுமார் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.... இவரது 14 வயது மகன் சஜன்... கொரோனா ஊரடங்கு தொடங்கியது முதலே ப‌ப்ஜி மற்றும் ஆன்லைன் ரம்மி கேமில் மூழ்கி கிடந்துள்ளார். தாய் கீதா பலமுறை கண்டித்தும் கண்டுகொள்ளாத சஜன் ஆன்லைன் ரம்மியில் அவ்வப்போது பணத்தையும் இழந்து வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் ஆன்லைன் ரம்மி கேமிற்கு பணம் செலுத்த பெற்றோரை மிரட்டும் அளவிற்கு அந்த கேமில் அடிமையாகி இருந்திருக்கிறார் சஜன்... இதனால் அதிர்ச்சியடைந்த கீதா, பணம் தர முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளார். சவுதியில் இருந்து போன் செய்த த‌ந்தை ராஜகுமாரும் கண்டிக்கவே ஆத்திரமடைந்த சஜன் செல்போனை தரையில் வீசி உடைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.... 

இதையடுத்து அங்குள்ள வாழை தோட்டத்தில் விஷம் அருந்தி, மயங்கிய நிலையில் கிடந்த சஜனை அங்கிருந்த விவசாயிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் சஜன்...இன்றைய இளம் தலைமுறையினரை செல்போனுக்கு அடிமையாக விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அப்படி அடிமையானதை உணர்ந்தால் பக்குவமாக எடுத்துச்சொல்லியோ,மாற்று ஆர்வத்தை தூண்டியோ, அவர்கள் மனதை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தைகள் நல ஆர்வலர்கள்... 


Next Story

மேலும் செய்திகள்