சென்னை பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையம் - வரும் 30 ஆம் தேதிக்குள் ஆணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
சென்னை பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையம் அமைப்பது தொடர்பாக வரும் 30 ஆம் தேதிக்குள் ஆணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னை கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளை சேர்ந்த பலர், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. டி.ஜி.பி., சார்பில் உதவி ஐ.ஜி., பதில்ம னுவைத் தாக்கல் செய்தார். கடந்த 10 ஆண்டுகளில், கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளை சேர்ந்த 170 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக பதில் மனுவில் இடம்பெற்றிருந்தது. போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அதில் கூறபட்டு இருந்தது. இந்த அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையத்தை அமைக்க வரும் 30 ஆம் தேதிக்குள் ஆணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Next Story