சகோதரியின் வாழ்க்கைக்காக கொலைகாரனாக மாறிய அண்ணன் - தலைமறைவான கொலையாளியை தேடி வரும் போலீசார்

மதுரையில் தங்கையின் வாழ்க்கை கேள்விக்குறியானதால் ஆத்திரமடைந்த அண்ணன், கொலையாளியாக மாறியதை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
சகோதரியின் வாழ்க்கைக்காக கொலைகாரனாக மாறிய அண்ணன் - தலைமறைவான கொலையாளியை தேடி வரும் போலீசார்
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் அதே பகுதியில் சிமெண்ட் வியாபாராம் செய்து வந்தார். இவருக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் என 3 பிள்ளைகள். இதில் 2வது மகனான சிவகுமாரை தன் தங்கை அன்னபேச்சியின் மகள் கலைச்செல்விக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். உறவுமுறையாக இருந்தாலும் இவர்களுக்கு மனதளவில் ஒத்துப் போகாததால் அடிக்கடி சண்டை சச்சரவுகள் தொடர்ந்து வந்தது. இதனால் வெறுத்துப் போன கலைச்செல்வி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிரிந்து சென்ற கலைச்செல்வியை மீண்டும் சிவகுமாருடன் சேர்ந்து வாழ வைக்க உறவினர்கள் பலரும் முயற்சி எடுத்தனர். ஆனாலும் கூட இருவரும் பிரிவதிலேயே திடமாக இருந்ததால் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது. இருந்தபோதிலும் தங்களின் மகனின் நலனை கருதிய சிவலிங்கம், மகன் சிவகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தார். 
இவர்களின் திருமணத்தால் அதிர்ச்சியடைந்தார் சிவகுமாரின் மைத்துனரான விஜயகுமார். தன் சகோதரி கலைச்செல்வியின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும் போது எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என மனதுக்குள் புலம்பித் தீர்த்தார். நேராக தன் தாய் மாமன் சிவலிங்கத்தின் வீட்டுக்கு சென்ற விஜயகுமார், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவலிங்கத்தை குத்தினார். தன் கணவருக்கு நடந்த கொடூரத்தை பார்த்து தடுக்க வந்த சரோஜா, மகன் சிவகுமார் உள்ளிட்டோரையும் ஆத்திரம் தீரும் அளவுக்கு குத்தினார் விஜயகுமார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். சிவலிங்கத்தின் மனைவி சரோஜா உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்