பச்சிளம் குழந்தை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் - காதலன் கைவிட்டதால் பெண் எடுத்த விபரீத முடிவு

சங்கரன்கோவில் அருகே குழந்தையை எரித்துக் கொன்ற வழக்கில் கைதான இளைஞர் பல பெண்களை ஏமாற்றியவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பச்சிளம் குழந்தை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் - காதலன் கைவிட்டதால் பெண் எடுத்த விபரீத முடிவு
x
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. திருமணத்துக்கு முன் காதலனால் ஏமாற்றப்பட்ட சங்கரகோமதி என்ற பெண்ணின் குழந்தை அது என விசாரணையில் தெரியவந்தது. 
எலெக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்த சங்கர், அதே ஊரை சேர்ந்த சங்கரகோமதி என்ற பெண்ணிடம் பழகி அத்துமீறிய நிலையில் அவர் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் காதலன் திருமணம் செய்ய மறுக்கவே, அதிர்ச்சியடைந்த அவரது குடும்பம் அவமானத்தில் வேறு இடத்திற்கு சென்றுள்ளனர். கர்ப்பமாக இருந்த சங்கரகோமதி சம்பவத்தன்று வீட்டிலேயே குழந்தை பெற்றெடுக்க அதை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். தாய் சங்கரகோமதி, பாட்டி இந்திரா ஆகியோர் குழந்தையை எடுத்துச் சென்று உயிருடன் எரித்து கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாட்டி இந்திராவை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சங்கரகோமதி காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே தலைமறைவாக இருந்த சங்கரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 
சங்கரகோமதியை ஏமாற்றிய சங்கர் பல பெண்களை ஏமாற்றிய மோசடி பேர் வழி என்பது விசாரணையில் தெரியவந்தது. சங்கரகோமதி மட்டுமின்றி பல பெண்களிடம் காதல் வலை வீசி அவர்களை ஏமாற்றியுள்ளார் சங்கர். சில நாட்களுக்கு முன் ராமசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சங்கர். இவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் வீட்டுக்கு தெரியவரவே, சங்கரின் நடவடிக்கையை சந்தேகித்த பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சங்கர் காவல்நிலையம் வரை செல்லவே, அந்த பெண் சங்கரை பிடிக்கவில்லை என கூறியிருக்கிறார். பின்னர் இரு தரப்பிலும் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரிக்கை விடுத்து அனுப்பியிருக்கிறார்கள் போலீசார். தன்னை விட அதிக வயது கொண்ட பெண்களிடமும் உறவை தொடர்ந்துள்ளார் சங்கர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பேச்சு கொடுத்து அவர்களை மயக்கி தன் வேலையை காட்டியிருக்கிறார் சங்கர். இதுபோல் பல கதைகளை கூறி போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் சங்கர். கைது செய்யப்பட்ட சங்கர், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குழந்தையின் தாய் சங்கரகோமதி விரைவில் கைது செய்யப்படலாம் என்கிறது காவல்துறை... போலியான காதலுக்கு பலியாகி இருப்பது ஒரு பிஞ்சு குழந்தை என்பது தான் சோகம்.... 

Next Story

மேலும் செய்திகள்