மதுரையில் திட்டமிட்டு வழிப்பறி செய்த கும்பல் - சினிமா பாணியில் நடந்த கொள்ளை சம்பவம்
மதுரையில் திட்டமிட்டு வழிப்பறி செய்த அரசு பேருந்து ஓட்டுநர், பெண் வழக்கறிஞர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த பாரதிராஜா பேட்மின்டன் அகாடமியில் பயிற்சியாளராக உள்ளார். கடந்த 19ஆம் தேதி இவர் தன் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற போது முகம் தெரியாத 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி , 6 சவரன் நகை மற்றும் 18 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துச் சென்றனர்.
இது குறித்து விசாரித்து வந்த போலீசாரின் பார்வை ஆட்டோ ஓட்டுநர் ஒற்றைக்கண் பாண்டியராஜன் மீது விழுந்த து . அவரை போலீசார் தேடிய போது , பெண் வழக்கறிஞர் கோட்டை ஈஸ்வரி அடைக்கலம் கொடுத்ததும் உறுதியானது.
இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், அந்த கும்பலை சுற்றி வளைத்தனர். அரசு பேருந்து ஓட்டுநரான ஸ்டீபன் வர்கீஸ், அவரது மனைவியான வழக்கறிஞர் கோட்டை ஈஸ்வரி, ஆட்டோ ஓட்டுநரான ஒற்றைக்கண் பாண்டியராஜன் உள்ளிட்ட கும்பல் மதுரை மாவட்டத்தில் ஸ்கெட்ச் போட்டு வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
பல நாட்களாக ஒருவரை கண்காணித்து அவரை பின்தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் இந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைதானவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களிடம் இருந்த தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
சினிமா காட்சிகளை போல ஒருவரை பல நாட்களாக கண்காணித்து ஊரடங்கு நாட்களில் கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழ திட்டமிட்ட கும்பல் இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறது...
Next Story

