கொரோனாவால் உயிரிழந்த அவசர ஊர்தி செவிலியர் - ரூ.1.10 லட்சம் நிதி திரட்டி உதவிய போலீசார்

கொரோனா தொற்றால் உயிரிழந்த108 ஆம்புலன்ஸ் உதவி செவிலியர் குடும்பத்திற்கு 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை போலீசார் நிவாரணமாக வழங்கினர்.
கொரோனாவால் உயிரிழந்த அவசர ஊர்தி செவிலியர் - ரூ.1.10 லட்சம் நிதி திரட்டி உதவிய போலீசார்
x
கொரோனா தொற்றால் உயிரிழந்த108 ஆம்புலன்ஸ் உதவி செவிலியர் குடும்பத்திற்கு 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை போலீசார் நிவாரணமாக வழங்கினர். திண்டுக்கல்லைச் சேர்ந்த 22 வயது கணேசன் என்பவர், திருப்பூரில் அவசர ஊர்தி செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் 24ஆம் தேதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்துக்கு உதவ நினைத்த மாவட்ட  ஆயுதப் படை போலீசார், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 38 ரூபாய் நிதியை திரட்டி. அதை மறைந்த செவிலியர் கணேசனின் பெற்றோரிடம் நேரில் சென்று வழங்கினர். போலீசாரின் அனுசரனையான இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஒரே குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே, ஒரே குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆடுதுறை பகுதியை சேர்ந்த 35 வயது நபர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் வசித்துவந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

சேலத்தில் மேலும் 124 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் மேலும் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்களில் 73 பேர் சேலம் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 3 ஆயிரத்து 309 உயர்ந்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 549 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஆயிரத்து 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் 43 பெண்கள் உள்பட 114 பேர் பாதிப்பு
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 சிறுவர்கள், 43 பெண்கள் உள்பட 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 4,363ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்து 564 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தூத்துக்குடியில் 6 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 381 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. தூத்துக்குடியில் ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த‌தால், பலி எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 278 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்து 747 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நெல்லையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்

நெல்லை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகர் பகுதியில் 129 பேருக்கும், பாளையங்கோட்டையில் 36 பேருக்கும், வள்ளியூரில் 69 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 4 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது.  

ஒரே ஊரில் 27 பேருக்கு கொரோனா தொற்று

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு கிராமத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இறுதி சடங்கு ஒன்றில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, கிராமத்தில் உள்ள 300 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 27 பேருக்கு தொற்று உறுதியானது. இதனை அடுத்து அந்த கிராமம் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலை ஊழியர் விபத்தில் பலி

சென்னை பேரம்பூரை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர், கடந்த 5 மாதங்களாக ஐ.சி.எப் இல் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், பேட்டரி காரை இயக்கியபோது, பின்புறமாக இருந்த ரயில் பெட்டி மீது மோதியது. இதில் பார்த்தசாரதியின் முதுகு, தலை ஆகிய இடங்களில் காயங்கள் ஏற்பட்டு மயக்கமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஐ.சி.எப் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தை - போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார்

தூத்துக்குடியில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.  அங்குள்ள அந்தோணியார் புரத்தை சேர்ந்த  முருகன் என்பவர், தனது 16 வயது மகளை பலாத்காரம் செய்துள்ளார். இவரது நண்பர் தங்க முருகன் என்பவரும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் முருகனை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய தங்க முருகனை தேடி வருகின்றனர். 

கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்

திருப்பூர் கொடிகம்பம் பகுதியில் இளைஞர்கள் சிலர் மது போதையில், பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிம், வீடுகளில் இருந்த செடிகளையும் சேதப்படுத்தியும் ரகளையில் ஈடுபட்டனர். இளைஞர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இளைஞர்கள் கத்தியுடன் சுற்றித் திரிந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சந்தன மரங்கள் கடத்தல் - 3 பேர் கைது

திருச்சியில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய, 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதியில் உள்ள சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சோதனையில் ஈடுபட்டபோது சந்தன மர கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

நள்ளிரவில் இடி மின்ன‌லுடன் கனமழை 

அரியலூர் மாவட்டம் பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த‌து. மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், நள்ளிரவில் இடி மின்ன‌லுடன் கனமழை பெய்த‌து. கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் அப்பகுதியில்இதமான சூழல் நிலவுகிறது.

கும்பகோணத்தை குளிர்வித்த மழை

கும்பகோணத்தில் சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்த‌து. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. தற்போதைய மழை குறுவை சாகுபடிக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரியவகை இலை வடிவ வெட்டுக்கிளி கண்டுபிடிப்பு

திருப்பூரில் அரிய வகை இலை வடிவ வெட்டுக்கிளி கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் தட்டையான இலையை போன்ற தோற்ற முடைய வெட்டுக்கிளி பூச்சி கண்டறியப்பட்டுள்ளது. வெட்டிக்கிளியின் இருபுறமும் இலையில் உள்ளது போல் நரம்புகள் உள்ளன. பூச்சியியல் ஆர்வலர்கள் இதனை ஆய்வு செய்யதிட்டமிட்டுள்ளனர். 

சேலம் அயோத்தி To உத்தரபிரதேச அயோத்தி - உ.பி., ராமர் கோவிலுக்கு செல்லும் தமிழக மண்

உத்திரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு சேலம் அயோத்தியில் இருந்து ராமநாம கல், மண், காவிரி நீர் உள்ளிட்டவை சிறப்பு பூஜை செய்து அனுப்பி வைக்கப்பட்டது.  உத்தரபிரதேசத்தில்  ராமர் கோவில் கட்டுவதற்கு வரும் ஆகஸ்ட்மாதம் ஐந்தாம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது. இதற்காக ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்ட இடமான சேலம் அயோத்தியாபட்டிணம் ராமர் கோவிலில் இருந்து ராமா நாம கல், காவிரிநீர் மற்றும் அயோத்தியபட்டினம் பகுதியின் மண் உள்ளிட்ட பொருட்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்