கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான 14 வயது சிறுமி - வீடு இல்லாமல் பிளாட்பாரத்தில் வசித்து வந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

மயிலாடுதுறை அருகே 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான 14 வயது சிறுமி - வீடு இல்லாமல் பிளாட்பாரத்தில் வசித்து வந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
x
மயிலாடுதுறை அருகே 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிறுமியின் இந்த நிலைக்கு அவரது உறவினர்களே காரணம் என்பது தான் சோகம்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட வரதம்பட்டு கிராமத்தில் தன் தாயுடன் வசித்து வந்தார் 14 வயதான சிறுமி. துப்புரவு தொழிலாளியாக தாய் வேலை பார்த்து வந்த நிலையில் பிளாட்பார வாழ்க்கை இவர்களுடையது. 

வீடு இல்லாததால் தண்ணீர் தொட்டி அருகே உள்ள இடத்தில் 8 ஆண்டுகளுக்கும் ​மேலாக வசித்து வந்தார் அந்த சிறுமி. 9 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமியின் மீது அங்கிருந்தவர்களின் கவனம் விழுந்துள்ளது. 

முதலில் சிறுமியிடம் அவரின் அக்காள் கணவரே அத்துமீறி இருக்கிறார். இதை மற்றவர்களிடம் அவர் சொல்லவே, மற்றவர்களுக்கும் சிறுமி இரையாக்கப்பட்டார். அக்காள் கணவரின் நண்பர், அவரின் நண்பர் என கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் இந்த சிறுமி. 

மகளுக்கு நடப்பது என்னவென்றே தெரியாத அளவிற்கு இருந்துள்ளார் சிறுமியின் தாய். இதனிடையே சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். அதுவும் வெளியே தெரியாமலே இருந்துள்ளது. இந்த சூழலில் தான் பிரசவத்திற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிறுமி. 

சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த தகவல் மாவட்ட சமூக நலத்துறைக்கு தெரியவே, அவர்கள் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது தான் சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் வெளியுலகத்திற்கு வந்தது. சிறுமியை சீரழித்ததை ஒப்புக் கொண்ட அவரின் அக்கா கணவர் தினேஷ், ஒரு கட்டத்தில் சிறுமிக்கு தாலி கட்டியதாகவும் கூறி அதிர வைத்துள்ளார். 

தாலி கட்டிய சிறுமியை மற்றவர்களுக்கு விருந்தாக்கியதோடு, அவரை மனதளவிலும் சித்ரவதை செய்திருக்கிறார் தினேஷ். இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவருடன் சேர்ந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சிறுமியின் உறவினரான அப்பு என்கிற ராஜ், ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

மேலும் மகளின் இந்த நிலைக்கு காரணமான தாயும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள நிலையில் அவர்கள் யார்? என விசாரணை நடைபெற்று வருகிறது. 

சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்... 


Next Story

மேலும் செய்திகள்