இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.
இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்
x
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். பட்டாம் பூச்சி விற்பவன் எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் கவனம் பெற்று, இளம் வயதிலேயே இலக்கிய உலகில் சிறந்த கவிஞராக அறியப்பட்டார்.

சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற ஆர்வத்துடன், இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். முத்துக்குமாரின் கவிதை இயற்றும் திறனைப் பார்த்து வியந்த அவரது நண்பரும், இயக்குனருமான சீமான் தனது "வீரநடை' திரைப் படத்தின் மூலம் நா.முத்துக்குமாரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.

காதல் கொண்டேன்' படத்துக்காக இவர் எழுதிய தேவதையை கண்டேன்.. உள்ளிட்ட பல பாடல்கள், முத்துக்குமாரின் திறமையைப் பறைசாற்றியது. தொடர்ந்து பல படங்களுக்கு பாடல்களை எழுதிய நா.முத்துக்குமார் தமிழ் திரையுலகில் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்தார்.

எளிய நடையில் உணர்வுகளைக் குழைத்து எழுதிய காதல் பாடல்கள் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது.தொடர்ந்து சுட்டும் விழி சுடரே... உருகுதே உருகுதே... பூக்கள் பூக்கும் தருணம்.. என் காதல் சொல்ல நேரம் இல்லை... உள்ளிட்ட ஏராளமான பாடல்களின் மூலம் வெற்றிகரமான பாடலாசிரியராக வலம்வந்தார்,  நா. முத்துக்குமார்.

நா. முத்துக்குமார் பாடல்களில் வரிகளை ஒருபோதும் இசை ஆதிக்கம் செலுத்தாது. அந்தளவிற்கு அவரது வரிகள் கணமானவை.

ஆண்டுதோறும் 100 க்கும் அதிகமான பாடல்களை எழுதி, தமிழ் திரையுலகில் அதிக பாடல்களை எழுதியவர் என்ற சாதனையையும் படைத்தார்.

தந்தையின் அன்பையும், தியாகத்தையும் எடுத்துரைத்த தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடலுக்கு கண் கலங்காதவர் யாருமில்லை.

தங்க மீன்கள் படத்திற்காக நா.முத்துக்குமார் எழுதிய, 
ஆனந்த யாழை மீட்டுகிறாய்... பாடல் தந்தை-மகளுக்கிடையிலான பாசப்பிணைப்பினைப் போற்றியது. இப்பாடலும், சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகு பாடலும் இவருக்கு 2 தேசிய விருதுகளைப் பெற்றுத்தந்தது.

1990 களின் இறுதியில் திரைத்துறையில் பாடலாசிரியராகப் பயணத்தை தொடங்கிய நா. முத்துக்குமார், மொத்தம் ஆயிரத்து 500 க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கிறார்.

2 தேசிய விருதுகளுடன் சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதையும் ஐந்துமுறை பெற்றிருக்கிறார். சிறுகதைகள், கவிதைகள், உரைநடை என 20 க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார்.

"கிராமம் நகரம் மாநகரம்', "ஆணா ஆவண்ணா", "என்னை சந்திக்க கனவில் வராதே', "குழந்தைகள் நிறைந்த வீடு', "அணிலாடும் முன்றில்' ஆகிய இவரது நூல்கள் பெரிதும் கவனம் பெற்றவை.

தன் உணர்ச்சிப்பூர்வமான அழகான பாடல்களால் திரையுலகையும், அதன் கோடிக்கணக்கான ரசிகர்களையும் திக்குமுக்காடச் செய்த நா. முத்துக்குமார், 2016 ஆம் ஆண்டு தனது 41 வது வயதிலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவது திடீர் மறைவு திரையுலகையும், இலக்கிய உலகினரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.




Next Story

மேலும் செய்திகள்